×

ஜோதிடத்தில் திதிகளின் சூட்சமங்கள் !

ஜோதிடத்தில் திதியின் முக்கியத்துவங்கள் பற்றியும் அதன் சூட்சம பலன்கள் பற்றியும் பார்போம். நவக்கிரகங்களின் செயல்களுக்கு, அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களே ஆதாரமாக உள்ளன. இந்த பஞ்ச அங்கங்களை அறிந்து கொள்பவர்களுக்கு எல்லாவிதமான நற்குணங்களும் உண்டாகும். பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களில் ஒன்று திதி. அமாவாசை தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே தீர்க்கரேகையில் உள்ளன. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள தீர்க்கரேகை வித்தியாசத்தின் அடிப்படையில் திதிகள் தோன்றுகின்றன. ஒரு மாதம் என்பது சந்திரனின் 15 நாள் வளர்பிறை
 

ஜோதிடத்தில் திதியின் முக்கியத்துவங்கள் பற்றியும் அதன் சூட்சம பலன்கள் பற்றியும் பார்போம்.

நவக்கிரகங்களின் செயல்களுக்கு, அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களே ஆதாரமாக உள்ளன. இந்த பஞ்ச அங்கங்களை அறிந்து கொள்பவர்களுக்கு எல்லாவிதமான நற்குணங்களும் உண்டாகும்.

பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களில் ஒன்று திதி. அமாவாசை தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே தீர்க்கரேகையில் உள்ளன. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள தீர்க்கரேகை வித்தியாசத்தின் அடிப்படையில் திதிகள் தோன்றுகின்றன. 

ஒரு மாதம் என்பது சந்திரனின் 15 நாள் வளர்பிறை நாட்களையும்,15 நாள் தேய்பிறை நாட்களையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.

அப்படியான ஒரு மாதத்தில் 14 நாட்கள் வளர்பிறைத் திதிகளும்,14 நாட்கள் தேய்பிறை திதிகளும் ஏற்படுகிறது மீதம் 2 நாட்கள் ஒன்று அமாவாசை, மற்றொன்று பவுர்ணமி ஆகிறது.

திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விசேஷமானவை.

தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி மூன்றும் சிறப்பான சுப திதிகள் ஆகும். இந்த திதியில் சுப காரியங்களில் ஈடுபடலாம்.

பிரதமை :

பிரதமைத் திதியில் பிறந்தவர்கள் சுக வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பார்கள்.

இத்திதியில் சுபகாரியங்களான யாகங்கள், ஹோமங்கள் திருமணம், கிரஹப்பிரவேசம் போன்றவற்றைச் செய்யலாம். இத்திதிக்கான தேவதை அக்னி பகவான்.

வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும். அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம்.

மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு நல்ல மனைவி அமைவாள் என்று பல்வேறு கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளது. 

மகரம், துலாம் ஆகிய ராசியில் பிறந்தவர்கள் இந்த திதி தினங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இத்திதியில் பிறந்தவர்கள் சிவ பெருமானை வழிபட்டு வர நன்மை பயக்கும்.

துவிதியை :

துவதியைத் திதியில் பிறந்தவர்கள் நேர்மைக் குணம் மிக்கவர்களாக இருப்பார்கள், இவர் எவ்வகைக் கருவிகளையும் திறம்பட கையாளும் திறமை மிக்கவர்களாக இருப்பார்கள்.

அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம்  இருக்கலாம்.

தேவதை பிரதிஷ்டை செய்யலாம். 
இந்த திதியில் கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம். இத்திதிக்கு அதிபதி பிரம்ம தேவன் ஆவார் .

இந்த திதியில் பிறந்தவர்கள் உண்மை பேசுபவர்களாகவும் அனைவராலும் விரும்பப்படுபவர்களாகவும் ஆயுதப் பயிற்சியில் வல்லவர்களாகவும் இருப்பார்கள் .

தனுசு, மீன ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் கவனமாக செயல்படுவது நலம். இந்த நாளில் அம்பிகையை வணங்க எல்லாம் சுபமாகும்.

திரிதியை :

திரிதியை இவர்களின் மனதில் தீமையான எண்ணங்கள் மேலோங்கும் சற்று முரட்டுக்குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இத்திதி தினத்தில் கல்வி பயிலுதல், வேதம் கற்றல், கலைகளைப் பயிலதொடங்குதல் போன்ற காரியங்களைச் செய்யலாம்.

குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது.

அழகுக் கலையில் ஈடுபடலாம். இதன் அதிதேவதை கௌரி (பராசக்தி).இந்த திதியில் மற்றவர்களுக்கு உதவி செய்வதை  தங்களது கடமையாக கொண்டு இருப்பார்கள்.

சிம்ம, மகர ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் கவனமாக செயல் பட வேண்டும். அம்மனை துதிக்க அனைத்தும் நலமாகும்.

சதுர்த்தி :

சதுர்த்தி திதியில் பிறந்தவர்கள் தங்கள் செயல் பாடுகளில் ரகசியம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். பேராசை எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகவும் தந்திர சாலிகளாக இருப்பார்கள்.

இத்திதி தினங்கள் கடன்களை அடைக்க, நெடு நாள் பகையைச் சமரசம் செய்து கொள்ள, வேத சாத்திரங்களைக் கற்க ஏற்றதாகும்.

முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது. எமதருமனும் விநாயகரும் இந்த திதிக்கு அதிதேவதை ஆவார்கள். 

ஜாதகத்தில்  கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும். இந்த திதியில் பிறந்தவர்கள் பேராசை உள்ளவர்களாகவும், ரகசியம் மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள்.

ரிஷப, கும்ப ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் எச்சரிக்கையுடன் செயல் படுவது அவசியம். விநாயகரை வழிபட வினைகள் நீங்கும்.

பஞ்சமி :

பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் பல நேர்மறையான குணங்களை பெற்றிருப்பார்கள். சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாகவும், நீண்ட ஆயுள் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

பொதுவாக கோவில் சம்பந்தமான சுபக் காரியங்களைச் செய்ய ஏற்ற திதியாகும். எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது.

குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம்.

விஷ பயம் நீங்கும். ஜாதகத்தில் நாக தோஷம் கொண்டவர்கள் இத்திதியில் புற்றுள்ள கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தால், அவர்களின் நாக தோஷம் நீங்கும். இந்த திதியில் பிறந்தவர்கள் அறிவாளிகளாகவும் ஆயுள் பலம் மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள்.

மிதுன, கன்னி ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் கவனமாக செயலாற்ற வேண்டும்.

சஷ்டி :

சஷ்டி திதியில் பிறந்தவர்கள் வீரம் மிக்கவர்களாக இருப்பார்கள். பணம், பொன் போன்றவற்றின் மீது அதிக ஆசைக் கொண்டவர்களாக இருப்பார்கள். உறவினர்களாலும், நண்பர்களாலும் அதிகம் விரும்பப்படுவார்கள். 

இதுவும் கோயில் சம்பந்தமான சுபக் காரியங்கள்,கோயில் குளங்கள் சீரமைத்தல் போன்ற செயல்களை செய்ய ஏற்ற திதியாகும்.சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம்.

வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். 

புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். முருகனுக்கு சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். இத்திதியில் முருகனுக்கு விரதமிருந்து, அவரை வழிபட புத்திரப் பேறில்லாமல் தவிப்பவர்களுக்கு அப்பேறு கிட்டும்.

இந்த திதியில் பிறந்தவர்களுக்கு ஆண் குழந்தைகள் அதிகம் உண்டு. நண்பர்களும் அதிகமாக இருப்பார்கள் . 

இத்திதிகளில் மேஷம், சிம்ம ராசிக்காரர்கள் கவனமாக செயலாற்ற வேண்டும்.

சப்தமி :

சப்தமி திதிகளில் பிறந்தவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள். கற்றோர்களையும், முதியவர்களையும் மதிக்கத் தெரிந்தவர்கள்.

நற்குணங்கள் நிறைந்தவர்கள். வெளியூர்,வெளிநாடு,கோயில்களுக்கு தீர்த்த யாத்திரை போன்ற பயணங்கள் செல்ல ஏற்ற திதியாகும். 

பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.

இத்திதியின் அதி தேவதை சூரிய பகவான் ஆவார். இந்த திதியில்  பிறந்தவர்கள் நற்குணம், செல்வம் மிக்கவர், கற்றோரையும் மூத்தோரையும் மதிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

கடக ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய திதியாகும். நாராயணரை வழிபட அனைத்தும் நலம் பயக்கும்.

அஷ்டமி :

அஷ்டமி திதியில் பிறந்தவர்கள் சிறந்த பேச்சாற்றலைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மனைவிக்கு கட்டுப்பட்டு நடக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். கிருஷ்ண பரமாத்மா அவதரித்த திதியாகும்.

புதிய கலைகள் கற்க, ஆயதப் பயிற்சி, போர்க் கலைகள் போன்றவற்றை கற்கத் தொடங்க ஏற்ற நாளாகும். இத்திதியின் அதி தேவதை சிவ பெருமான்.இந்த திதி யி ல் பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணைவருக்கு உண்மையாக இருப்பார்கள், பேச்சாற்றல் கொண்டவர்களாவும் இருப்பார்கள்.

கன்னி, மிதுன ராசிக்காரர்கள் கவனமாக செயலாற்ற வேண்டிய திதி. கிருஷ்ணா பரமாத்மாவை வணங்குங்கள்.

நவமி :

நவமி திதியில் பிறந்தவர்கள் தைரியமிக்கவர்களாக இருப்பார்கள். கலைகளில் அதிக ஈடுபாடு இருக்கும். தங்கள் எதிரிகளை ஒழிப்பார்கள். தீய பழக்க, வழக்கங்களை ஒழிக்க, பிறர் மீது மாந்திரிகம் பிரயோகிக்க ஏதுவான திதியாகும். சத்ரு பயம் நீக்கும் திதி இது.

கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இத்திதியின் அதி தேவதை துர்கை அம்மன் ஆவார்.

இந்த திதியில் பிறந்தவர்கள் தைரியமும், பாசமும் கொண்டவர்களாகவும் , கலையார்வம் மிக்கவர்களாகவும் , எதிரிகளுக்கு பயங்கரமானவர்களாகவும் இருப்பார்கள்.

சிம்ம, விருச்சிக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய திதி. ஸ்ரீ ராமா பிரானை வழிபடவேண்டும்.

தசமி :

தசமி திதியில் பிறந்தவர்கள் விஞ்ஞான அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். தொழில்,வியாபாரங்களில் மிகுந்த செல்வம் ஈட்டுவார்கள். திருமணம்,பெயர்சூட்டல்,கோயில் குடமுழுக்கு போன்ற சுபக் காரியங்கள் செய்ய ஏதுவான திதியாகும். 

எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாளிது. பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்தத் திதிக்கு எமதருமனே அதிதேவதை ஆவார்.

சிம்ம, விருச்சிகக் காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய திதி தினம். சக்தி தேவியை வணங்க அனைத்தும் நலமாகும்.

ஏகாதசி :

ஏகாதசி திதியில் பிறந்தவர்கள் பெண்கள் மீது பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். தர்மம் மீறியச் செயல்களை செய்யமாட்டார்கள்.  இந்த திதி சுபக் காரியங்கள் அனைத்தும் செய்ய ஏற்ற திதி தினமாகும்.

இந்த திதியில் விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இத்திதியின் அதி தேவதை ருத்திரன் ஆவார்.

தனுஷ் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய திதி.பெருமாளை வணங்குங்கள்.

துவாதசி :

துவாதசி திதியில் பிறந்தவர்கள் செல்வமிக்கவர்களாக இருப்பார்கள்.பெண்களால் அதிகம் விரும்பப்படுவார்கள்.

கோயில் சம்பந்தமான காரியங்கள்,சிற்பம் ஓவியம் போன்ற கலைகளைப் பயில ஏற்ற திதியாகும்.இந்த திதியில் மதச்சடங்குகளில் ஈடுபடலாம். இந்த திதி யின் அதிதேவதை விஷ்ணு ஆவார்.

மகர, துலா ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய திதி. முருகனை வணங்க அனைத்தும் ஜெயமாகும்.

திரியோதசி :

இத்திதியில் பிறந்தவர்கள் நல்ல மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுற்றமும், நட்பும் அதிகம் பெற்றிருப்பர். இதுவும் தெய்வீக,சுபக் காரியங்கள் அனைத்தும் செய்ய ஏற்ற திதியாகும்.

இந்த திதியில் சிவ வழிபாடு செய்வது விசேஷம். இந்த திதியில் பயணம் மேற்கொள்ளலாம்.

புத்தாடை அணியலாம். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். இத்திதியின் அதி தேவதை சிவ பெருமான் ஆவார்.

ரிஷப, கும்ப ராசிக்காரர்கள் கவனமுடன் செயலாற்ற வேண்டிய திதி. சிவனை வழி பட வேண்டும்.

சதுர்தசி :

இத்திதியில் பிறந்தவர்கள் நல்ல உடல், மன பலம் கொண்டவர்களாக இருப்பார்கள்.தங்கள் நினைத்ததை நடத்திக் காட்டுவார்கள். கல்வி கற்க தொடங்க, புதிய கலைகள் பயில ஏற்ற திதியாகும்.

இந்த திதியில் தமக்கென தனிக் கொள்கையுடன் வாழ்வார்கள். இத்திதியின் அதி தேவதை காளி.

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசியினர் கவனமுடன் இருக்க வேண்டிய திதி. பைரவரை வழிபட துன்பங்கள் நீங்கும்.

பௌர்ணமி: ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். நீண்ட கேசம் உண்டு. முயற்சிகளில் வெற்றி பெறுபவர், ஆயுள் பலம் மிகுந்தவர்.
விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்.

அமாவாசை: பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான,தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். ஈடுபடலாம். இயந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம்.

நல்ல வாழ்க்கையைப் பெற்றவர்களாகவும் எதிரிகளுக்கு பயங்கரமானவர்களாகவும் இருப்பார்கள். இந்த திதிக்கு சிவன் மற்றும் சக்தி அதிதேவதை ஆவார்கள்.