சொந்த காரை திருடி சென்ற உரிமையாளர்: தீவிரமாக தேடும் போலீசார்!
காரின் ஒரிஜினல் டாக்குமென்ட்டுகளை கொண்டு வந்து கொடுத்துவிட்டு காரை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
சென்னை: வாகன தணிக்கையின் போது பிடிபட்ட காரை அதன் உரிமையாளர் மாற்று சாவி போட்டு கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் அன்புச்செல்வன். திரைத்துறையில் இசை கலைஞராக பணியாற்றி வரும் இவர், நேற்று இரவு குடிபோதையில் தனது காரில் வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன தணிக்கையிலிருந்த போக்குவரத்து ஆய்வாளர் மயில்சாமி தலைமையிலான போலீசார் அன்புச்செல்வன் குடிபோதையிலிருந்ததால் காரை பறிமுதல் செய்ததுடன் அவருக்கு அபராதமும் விதித்துள்ளனர். பின்னர் காரின் ஒரிஜினல் டாக்குமென்ட்டுகளை கொண்டு வந்து கொடுத்துவிட்டு காரை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து காவல் நிலையம் முன்பு பறிமுதல் செய்த காரை அதன் உரிமையாளர் அன்புச்செல்வன் மாற்று சாவி கொண்டு சென்றுள்ளார். இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதன்காரணமாக வடபழனி சட்டம் ஒழுங்கு பிரிவு காவல்துறையினர் அன்புச்செல்வனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.