×

செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி வழிபாடு : வெற்றிகளை தருகின்ற வழிபாடு 

செவ்வாய்க்கிழமையும் தேய்பிறை அஷ்டமி திதியும் இணையும் இந்நாளில் பைரவரை வழிபட சகல சம்பத்தும் கிடைக்கும். வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் ஏற்படுவது இயல்புதான் அந்த தருணங்களில் நாம் மிகவும் சோர்ந்து போகிறோம். இந்த தருணங்களில் சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபாடு செய்வதால் அனைத்து கஷ்டங்களில் இருந்தும் நாம் விடுபட முடியும் சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். பன்னிரண்டு ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் என எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆதி தெய்வம்
 

செவ்வாய்க்கிழமையும் தேய்பிறை அஷ்டமி திதியும் இணையும் இந்நாளில் பைரவரை வழிபட சகல சம்பத்தும் கிடைக்கும்.

வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் ஏற்படுவது இயல்புதான் அந்த தருணங்களில் நாம் மிகவும் சோர்ந்து போகிறோம். இந்த தருணங்களில் சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபாடு செய்வதால் அனைத்து கஷ்டங்களில் இருந்தும் நாம் விடுபட முடியும்

சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். பன்னிரண்டு ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் என எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆதி தெய்வம் பைரவர். காசி நகரமே பைரவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அதனால்தான் அங்கு இறப்பவருக்கு மோட்சம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

 எட்டு விதமாகத் தோன்றிய பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று வணங்கப்படுகிறார்கள்.ருரு பைரவர்,சண்ட பைரவர்,குரோதன பைரவர்,உன்மத்த பைரவர்,சம்ஹார பைரவர்,பீக்ஷன பைரவர்,கபால பைரவர் என எட்டு பைரவர் மட்டுமின்றி ஆதிசைவர்கள் 64 விதமான பைரவர்களையும் வணங்கி வந்துள்ளார்கள் என  புராணங்கள் கூறுகின்றன.  

அஷ்டமி வழிபாடு ஆபத்திலிருந்து காக்கும் வழிபாடு ஆகும் .அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்றைய தினம் ராகு காலத்தில் பைரவரை வழிபாடு செய்ய வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும்.  

பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகாஞானியான,ரௌத்ர தோற்றம் கொண்டவர். எல்லா சிவாலயங்களிலும் ஆலயம் திறந்தவுடனும், இரவு கோயில் மூடப்படும்போதும் பைரவ பூஜை செய்வார்கள். நாயை வாகனமாகக் கொண்டு அனேகமாக திகம்பரராக காட்சி தருபவர் பைரவர்.

நீலநிற மேனியரான பைரவர் பாம்பை முப்புரி நூலாகத் தரித்தவர். மண்டை ஓட்டு மாலை அணிந்தவர். சூலம்,பாசம், மழு, கபாலம் ஏந்தியவர். திருமுடியில் பிறைநிலவு சூடியவர். பிரம்ம சிரச்சேதர், க்ஷேத்திரபாலகர்,வடுகர்,ஆபத்துதாரணர், காலமூர்த்தி,கஞ்சுகன், திகம்பரன் என்று பல திருப்பெயர்கள் பைரவருக்கு இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும்,சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும். ஏழரைச் சனி,அஷ்டமச் சனி யாவும் பைரவரை வணங்கினால் நன்மையாக முடியும்.

அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு  ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து,வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும். எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கையாகும்.