கொரோனாவால் அரசுக்கு நிதி நெருக்கடி; அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 4,231 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகி வருவதால், அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் படுக்கை வசதிகள், கூடுதல் உபகரணங்கள், சிறப்பு மருத்துவமனை முகாம்கள் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதிவேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால் தமிழக அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடி நிலவுகிறது.
இந்த நிலையில், சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மதிப்பூதியம் திரும்பப் பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளது.