குடிபோதையில் தகராறு.. நண்பனையே சரமாரியாக வெட்டிக் கொன்ற இளைஞர்; அதிர்ச்சி சம்பவம்!
மதுபோதையில் ஒருவர் தன் நண்பரையே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து பல வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனிடையே மதுக்கடைகளும் திறக்கப்பட்டு விட்டன. அதன் காரணமாக வன்முறை அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் மதுபோதையில் ஒருவர் தன் நண்பரையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே புதுசுக்காம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர்கள் சிவக்குமார் மற்றும் பிரபு. இவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. நேற்று இரவு சிவகுமாரும் பிரபுவும் கண்மாயில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மதுபோதையில் தகராறு வந்துள்ளது. அந்த சண்டையில் பிரபு கழுத்தில் இருந்து சிவக்குமார் செயினை அறுக்க முயற்சி செய்ததால், ஆத்திரமடைந்த பிரபு தான் வைத்திருந்த கத்தியால் சிவக்குமாரை கத்தியால் குத்தியுள்ளார். அதனால் படுகாயம் அடைந்த சிவக்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, பிரபு தனது தந்தையுடன் மேலூர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அங்கு பிரபு தான் சிவக்குமாரை கொலை செய்து விட்டதாக அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.