இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டமன்றம்!
ஏப்ரல் 9ம் தேதி வரை விடுமுறைகள் தவிர மொத்தம் 23 நாட்களுக்கு நடத்துவது சபாநாயகர் தனபால் முடிவெடுத்தார்.
துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடத்துவதற்காக தமிழக சட்டசபை கடந்த 9-ந் தேதி கூடியது. முதல் நாளில் மறைந்த உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, எஸ்.காத்தவராயன், முன்னாள் உறுப்பினர்கள் பேராசிரியர் க.அன்பழகன், ப.சந்திரன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி 2020-21-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. அதேபோல் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தொடங்கியது. அதில் 2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஓபிஎஸ் தாக்கல் செய்தார். இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தை மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை விடுமுறைகள் தவிர மொத்தம் 23 நாட்களுக்கு நடத்துவது சபாநாயகர் தனபால் முடிவெடுத்தார்.
இதையடுத்து மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காகத் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான க.அன்பழகன், எம்எல்ஏ காத்தவராயன், கே.பி.பி.சாமி, முன்னாள் எம்எல்ஏ ப.சந்திரன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாள் முழுவதும் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் 11-ந் தேதி முதல் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் வனம், சுற்றுச்சூழல் துறைகள்,பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, உயர் கல்வி துறைகள், எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதும் விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது. காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கும் இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை போன்ற துறைகளின் மீது விவாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.