அகத்திய முனிவர் தவம் செய்த திருத்தலம்…திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் சிறப்பம்சங்கள்
சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் மருந்தீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது.
சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் மருந்தீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் திருவான்மியூருக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் எளிதில் இந்த ஆன்மீக திருத்தலத்தை அடையலாம். இந்தக் கோயிலில் ஆண்டு முழுக்க எல்லா நாட்களிலும் சமய சொற்பொழிவுகள் நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். அத்துடன் ஏராளமான பசுக்களை கொண்ட பசுமாடமும், ஆன்மீக நூலகமும் இக்கோயிலில் உள்ளது.
அகத்திய முனிவர் இந்த தலத்திற்கு வந்து சுவாமியை வணங்கி தவம் செய்தார். இதையடுத்து வன்னி மரத்தடியில் அவருக்கு காட்சியளித்த ஈசன் உலகில் உள்ள நோய்களுக்கான மருந்துகள் பற்றியும், மூலிகைகள் பற்றியும் அகத்தியருக்கு உபதேசம் செய்தார். இதனாலேயே இங்குள்ள ஈசன் மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள மூலவரான மருந்தீஸ்வரர் மேற்கு நோக்கி அமர்ந்து காட்சியளிக்கிறார். அபயதீட்சிதர் எனும் பக்தர் இங்குள்ள ஈசனை காண வந்தபோது கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த பக்தரால் நீரைக் கடந்து வந்து சுவாமியை தரிசிக்க முடியவில்லை. இதனால் அவருக்கு தரிசனம் வழங்கும் பொருட்டு ஈசன் மேற்கு நோக்கி திரும்பி அமர்ந்ததாக வரலாறு கூறுகிறது. அதேசமயம் மூலவரை தவிர்த்து தாயார் திரிபுரசுந்தரி அம்மன் தெற்கு நோக்கியும், விநாயகர், முருகன் ஆகியோர் கிழக்கு நோக்கியும் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். மருந்தீஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் முன்பு மிகப் பெரிய தெப்பகுளமும், உள்ளே ஒரு சிறிய தடாகமும் அமைந்துள்ளது.
இந்த மருந்தீஸ்வரர் கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்களின் வருகைக்காக திறக்கப்படுகிறது. பங்குனி பிரம்மோற்சவம், சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, பவுர்ணமி, கிருத்திகை நாட்களில் இக்கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் காட்சியளிக்கும் விநாயகரின் திருநாமம் விக்னேஸ்வரர் ஆகும். மேலும் இக்கோயிலில் நைவேத்தியமாக பொங்கல் படைக்கப்படுகிறது.