×

‘விவசாயிகளின் கறுப்புக் கொடி போராட்டடத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்’ தொல்.திருமாவ‌ளவன்

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பல்வேறு சட்டத்திருத்தங்களைக் கொண்டு வருகிறது. அவற்றில் ஒன்றுதான் வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல் அவசரச் சட்டம்’ இதனால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என அகில இந்திய விவசாயிகள் கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு உண்டு என்றும் அப்போராட்டத்தில் தங்கள் கட்சியும் பங்கேற்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும்
 

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பல்வேறு சட்டத்திருத்தங்களைக் கொண்டு வருகிறது. அவற்றில் ஒன்றுதான் வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல் அவசரச் சட்டம்’ இதனால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என அகில இந்திய விவசாயிகள் கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு உண்டு என்றும் அப்போராட்டத்தில் தங்கள் கட்சியும் பங்கேற்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘கொரோனா பேரிடர் சூழலில் விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கோடு சட்டமசோதா ஒன்றைக் கொண்டுவருவதுடன் மூன்று அவசரச் சட்டங்களையும் மத்திய பாஜக அரசு பிறப்பித்துள்ளது. இந்த விவசாயிகள் விரோத நடவடிக்கையைக் கண்டித்து ஜூலை 27ஆம் தேதி கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தை நடத்துவது என அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானித்துள்ளது. அந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் விவசாய அணியும் பங்கேற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாஜக அரசு பிறப்பித்துள்ள ‘அத்தியாவசிய பொருட்கள் அவசர திருத்தச் சட்டம்’ இதுவரை அத்தியாவசிய பண்டங்களின் பட்டியலில் இருந்த அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், தானியங்கள், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. இதனால் இந்தப் பொருட்களின் விலை அதிகரிக்கும். இதன் மீதான வரிவிதிப்பும் கூடும். இதனால் ஏழை எளிய மக்கள் தமது உணவுப் பாதுகாப்பை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே,இந்த அவசர சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

‘ வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல் அவசரச் சட்டம் ‘ என ஒன்றை பாஜக அரசு பிறப்பித்துள்ளது. இது ‘ஒரே நாடு ஒரே சந்தை’ என்ற அவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. சிறு-குறு நடுத்தர விவசாயிகளின் வேளாண் உற்பத்தி பொருட்களை கார்ப்பரேட்டுகள் கொள்முதல் செய்து அவர்கள் தீர்மானிக்கும் விலையில் விற்பதற்கு இந்த சட்டம் வழிவகுக்கிறது. இது விவசாயிகளுக்கு மரணஅடியாக அமைந்துள்ளது.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள இன்னொரு அவசர சட்டமான ‘விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம்’ என்பதும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான ஒன்றாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாவற்றுக்கும் உச்சமாக பாஜக அரசு கொண்டுவர முற்பட்டிருக்கும் ‘ மின்சாரத் திருத்தச் சட்ட மசோதா ‘ அமைந்துள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் தற்போது விவசாயிகள் அனுபவித்து வரும் இலவச மின்சார வசதி பறிக்கப்படும்; ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்கட்டண சலுகைகளும் ரத்து செய்யப்படும். இதனால் அவர்களும் அதிக அளவில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முதலாளிகள் மின்சாரத்தை விநியோகம் செய்யவும் இந்த சட்டம் வழி வகுக்கிறது. இதனால் அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். பாஜக அரசு இயற்றியுள்ள அவசர சட்டங்களையும், கொண்டு வரவிருக்கும் சட்ட மசோதாவையும் எதிர்க்க வேண்டியது அனைவருக்குமான கடமையாகும்.

எனவே, இந்தக் கொடுங்கோன்மை சட்டங்களை எதிர்த்து நடைபெறும் இப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விவசாய அணியினர் மட்டுமின்றி; கட்சியின் அனைத்துத் தோழர்களும் முழுமூச்சாகப் பங்கேற்க வேண்டும். அன்றைய தினம் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். போராட்டக்குழுவினர் திட்டமிட்டுள்ளவாறு, ‘ ஒரு கோடி கையொப்பங்களைப் ‘ பெற்றுத் தருவதில் அனைவரும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்திருக்கிறார்.