‘சாதி மறுப்பு திருமணம்’… உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்குகளில் இன்று தீர்ப்பு!
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமர லிங்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கவுசல்யாவும் காதலித்து வந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத கவுசல்யாவின் உறவினர்கள் கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கவுசல்யாவின் உறவினர்கள் தான் சங்கரை கொலை செய்தது தெரிய வந்தது.
அதனால் கவுசல்யாவின் பெற்றோர் தாய்மாமன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகத் திருப்பூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனையும் அவரது தாய்மாமன் மற்றும் உறவினர் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அவர்களின் தூக்குத்தண்டனையை உறுதி செய்யும் நடைமுறை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதனிடையே அவர்கள் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல்துறையினர் தரப்பிலும், தூக்குத்தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமியும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த அனைத்து வழக்குகளையும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விரிவான விசாரணை நடத்தினர். இந்த நிலையில், அந்த அனைத்து வழக்குகளின் தீர்ப்புகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.