துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பதை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்க்கிறது! – கமல் கண்டனம்
துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது, ஆனால் அரசு இதையும் வேடிக்கை பார்த்து அமைதி காப்பது மிகப்பெரிய குற்றம் என்று கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (ஜூலை 16) சென்னையில் பாதாள சாக்கடைக் குழிக்குள், இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் மீண்டும் மீண்டும் மனித உயிர்கள் அலட்சியப்படுத்தப்படுவதை அழுத்தம் திருத்தமாக காண்பிக்கிறது. கடந்த ஜூலை 2-ம் தேதி தூத்துக்குடியில் நான்கு தொழிலாளர்கள், நேற்று சென்னையில் இருவர் என துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது.
மனித உயிர்களுக்கு எதிரான அனைத்து அநீதிகளையும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது போல, அரசு இதையும் வேடிக்கை பார்த்து அமைதி காப்பது குற்றமாகும். அறிவியல் சாதனைகளில் உச்சம் தொட்டாலும் அன்பின் இயல் வளரா சமூகமாக நாம் தேங்கி விடக்கூடாது. மனிதக்கழிவுகளை மனிதன் அகற்றுவது தடை செய்யப்பட்ட குற்றம். சக மனிதனை அக்கொடுமைக்கு உள்ளாக்கும் குற்றத்தை பிறரை செய்ய விடாமல் தடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்” என்று கூறியுள்ளார்.