கொரோனா தடுப்பில் மாநில அரசுக்கு மத்திய அரசு உதவவில்லை- பரபரப்பு புகார்!
உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 4, 15,624 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,30,586 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால் 13,347 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்த நடவடிக்கைக்கு மத்திய அரசு உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தெலங்கானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஈத்தலை ராஜேந்திரா குற்றம்சாட்டியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மீண்டும் மீண்டும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாற்றிக்கொண்டிருப்பதாக குறை கூறினார். ஆயிரம் வெண்டிலேட்டர்களை கேட்டதாகவும் ஆனால் மத்திய அரசு 50 வெண்டிலேட்டர்களை மட்டுமே கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தெலங்கானாவிற்கு வரவேண்டிய கருவிகளை, பிரதமரின் உத்தரவின்படி ஐசிஎம் ஆர் கொல்கத்தாவிற்கு திருப்பிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். மத்திய அரசு உரிய வசதிகளையும், நிதி உதவிகளையும் செய்யவில்லை என குறிப்பிட்ட அமைச்சர், மாநில அரசே சமாளித்துவிட்டதாக கூறினார்.