இலவச போக்குவரத்து சேவை : எஸ்.எஸ்.ஆர்.பி.எஸ். பேருந்து நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,989 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,687 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 30,444 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில் கோவில்பட்டியில் SSRBS பேருந்து போக்குவரத்து நிறுவனம் தங்களது பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு கோவில்பட்டி, கழுகுமலை, சங்கரன்கோவில் புளியங்குடி, தென்காசி வரை இலவச போக்குவரத்து சேவையை இன்று முதல் வழங்கியுள்ளது.
ஊரடங்கு முடியும் வரை பயணிகளுக்கு இந்த சிறப்பு சலுகை அமலில் இருக்கும் என எஸ்.எஸ்.ஆர்.பி.எஸ். நிர்வாகி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.