×

நவராத்திரி ஏழாம் நாள்: பயத்தை போக்கி, தைரியத்தை தருவாள் காலராத்ரீ!

வெல்லமுடியாதவளும், வெற்றிக்கு உரியவளுமான துர்க்கையை வழிபடுவதே நவராத்திரியாகும். அன்னை ஆதிபராசக்தியின் அனுக்கிரகத்தினை பெற்றிட, சக்தியின் ஒன்பது வடிவமான நவதுர்க்கை வழிபாடு மிகவும் விசேஷமானது. நவதுர்க்கை என்பது துர்க்கையின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். நவராத்திரியின் ஏழாவது நாளான இன்று துர்க்கையின் ஏழாவது வடிவமான காலராத்ரீ ரூபம் மிகவும் பயங்கரமானதாகும். கால என்றால் நேரம், மரணம், என்றும் ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள்படும். காலராத்ரீ என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும். ராத்திரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற
 

வெல்லமுடியாதவளும், வெற்றிக்கு உரியவளுமான துர்க்கையை வழிபடுவதே நவராத்திரியாகும். அன்னை ஆதிபராசக்தியின் அனுக்கிரகத்தினை பெற்றிட, சக்தியின் ஒன்பது வடிவமான நவதுர்க்கை வழிபாடு மிகவும் விசேஷமானது. நவதுர்க்கை என்பது துர்க்கையின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும்.

நவராத்திரியின் ஏழாவது நாளான இன்று துர்க்கையின் ஏழாவது வடிவமான காலராத்ரீ ரூபம் மிகவும் பயங்கரமானதாகும். கால என்றால் நேரம், மரணம், என்றும் ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள்படும். காலராத்ரீ என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும். ராத்திரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்ற அர்த்தமும் உண்டு. கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயே இவளுக்குக் காலராத்ரீ எனப் பெயர் ஏற்பட்டது.

இன்றைய தினம் எட்டு வயது பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் நம் வீட்டுக்கு அழைத்து, அவர்களை சாம்பவியாக பாவித்து பூஜித்து, எலுமிச்சை சாதமும், ஏதேனும் ஒரு நவதானியத்தில் செய்த சுண்டலையும் அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாக வழங்கவேண்டும். தூய்மையின் நிறமான வெண்மை நிற மலர்களைக்கொண்டு திட்டாணி கோலம்போட்டு, மஞ்சள் நலங்கு , சாந்து பொட்டு வைத்து, மல்லிகைப் பூ, பாரிஜாதம், தாழம்பூ அல்லது வெண்மை நிறத்திலான நறுமணம் நிறைந்த மலர்களால் அலங்கரித்து, பன்னீர் இலையால் அர்ச்சனை செய்து பூஜிக்க வேண்டும். நைய்வேத்தியமாக பேரிச்சை பழம், எலுமிச்சை சாதம், வெல்லம் அல்லது வெல்லத்தால் செய்த இனிப்பு பலகாரங்கள் செய்து வழிபட வேண்டும்.

காலராத்ரீ தேவிக்கான மந்திரம்
ஓம் காலராத்ரியை நம;

இத்துர்க்கையின் வடிவம் எதிரிக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது. இவளின் உடல் மழை மேகம் போல் அடர் கரிய நிறம் கொண்டது. இவள் நான்கு கரம் கொண்டவள். ஒரு கரத்தில் வஜ்ராயுதமும், மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தருக்கு அபயம் தரும். அன்னை கழுதை வாகனத்தில் ஏறி வருபவள். இவளின் பார்வை பட்டாலே துன்பங்களும், பாவங்களும் தொலையும் என்றும், பேய் பிசாசுகள் பயந்து ஓடும், எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த துர்க்கையை தைரியம் அதிகரிக்கவும், அச்சத்தைப் போக்கவும் மக்கள் வணங்குகின்றனர். மேலும், இவளின் உருவம் பக்தர்களுக்கு பயம் தராமல் நன்மை செய்வதால் இவரை ‘சுபங்கரி’ என்றும் கூறுவர். காசியில் காளிகாகலி என்ற இடத்தில் இவளுக்கு கோயில் உள்ளது. யோகிகள் இவளின் அருள் கொண்டு ஏழாம் சக்கரமான ‘சகஸ்ராகாரத்தை’ அடைவர்.

தியான மந்திரம்:

வாமபாதோல்லஸத் லோஹலதா கண்டக பூஷணா
வர்த்தந் மூர்த்தத்வஜா க்ருஷ்ணா காலராத்ரிர் பயங்கரீ

நீளமான நாக்கு கொண்டு, கழுதை மீது பவனி வருபவளும், ஆக்ரோஷமாக இருப்பவளும், பல வண்ணங்களில் ஆபரணங்கள் அணிந்து இருப்பவளுமாகிய பயங்கரியாம் காலராத்ரீ என்னுடைய அஞ்ஞானம் என்னும் இருளை போக்கி அருள்பாலிக்க வேண்டும். அனைத்து நலன்களையும் பெற அம்பிகையை வணங்குவோம். ஓம் சக்தி! ஓம் பராசக்தி!! ஓம் ஆதிபராசக்தி!

-வித்யா ராஜா