தந்தை – மகன் விவகாரம்: அனைவரையும் கைது செய்துவிட்டோம்… தமிழக அரசுக்கு நன்றி! – ஐ.ஜி சங்கர் பேட்டி
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் கைது செய்துவிட்டோம் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
விசாரணையைத் தொடங்கிய சி.பி.சி.ஐ.டி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர்கள். இன்ஸ்பெக்டர், காவலர்களை அழைத்து விசாரித்து கைது செய்தது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஐஜி சங்கர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு முக்கிய நபர்களான காவல் ஆய்வாளர் ஶ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு எஸ்.ஐ ரகுகணேஷ் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசுக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது” என்றார்.