மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்த வேண்டாம்! ஆளுநருக்கு ராமதாஸ் கோரிக்கை
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்க இட ஒதுக்கீடு வழக்கும் அவசர சட்டத்தை தாமதமின்றி பிறப்பிக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்தை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். “தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து இரு வாரங்களுக்கு மேலாகியும், அவசரச் சட்டத்தை ஆளுனர் இன்னும் பிறப்பிக்கவில்லை. சமூகநீதி சார்ந்த விஷயங்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுனர் தேவையின்றி தாமதம் செய்வது வருத்தமளிக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள், அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படும் அவசர சட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாக, அது பற்றி சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்க ஆளுனருக்கு அதிகாரம் இருப்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில், மிக முக்கியமான அவசர சட்டங்களை நிறைவேற்ற அரசு விரும்பும் போது, சட்ட ஆலோசனை என்ற பெயரில், அதற்கு ஆளுனர் முட்டுக்கட்டை போடக் கூடாது.
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை தமிழக அரசு தன்னிச்சையாக எடுக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பொன். கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து, அதன் பரிந்துரை அடிப்படையிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதுமட்டுமின்றி, அவசர சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடமும் சட்ட ஆலோசனை பெற்றுள்ளது. இவ்வளவுக்குப் பிறகும், மீண்டும் ஒருமுறை சட்ட ஆலோசனை பெறப் போவதாகக் கூறி அவசரச் சட்டம் பிறப்பிப்பதை ஆளுனர் அலுவலகம் தாமதப்படுத்துவது நியாயமற்றது ஆகும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது மிகவும் அவசியம் ஆகும். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கும், மருத்துவப் படிப்பில் தேவையான மதிப்பெண்கள் பெறுவதற்கும் லட்சக் கணக்கில் பணம் செலுத்தி, தனியார் பயிற்சி மையங்களில் குறைந்தது இரு ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டியுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இது சாத்தியப்படாது. இத்தகைய சூழலில் அரசு பள்ளி மாணவர்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையை கருத்தில் கொண்டு மருத்துவப் படிப்பில் அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது தான் சமூக நீதி ஆகும். தமிழக அரசின் இந்த நல்ல முயற்சிக்கு ஆளுனர் துணையாக இருக்க வேண்டுமே தவிர, தேவையற்ற தாமதம் செய்து தடையாக இருக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து குறிப்பிடப் பட வேண்டும். அதற்கு வசதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை ஆளுனர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.