தனியார் மருத்துவமனைகளை கைப்பற்ற வேண்டும்! – அரசுக்கு பொது மக்கள் கோரிக்கை
கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில், தனியார் மருத்துவமனைகளை தற்காலிகமாக கையகப்படுத்தி பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவில் மிக அதிகபட்சமாக மும்பைக்கு அடுத்த படியாக சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. போதுமான படுக்கை வசதி இல்லாத காரணத்தால் பல நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தனியார் மருத்துவமனைக்கு பலரும் படையெடுத்து வருவதாகவும் அங்கு லட்சங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதனால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்று தமிழக அரசு கட்டண நிர்ணயம் செய்தது எல்லாம் அறிந்ததே.
தனியார் கல்யாண மண்டபங்கள், பள்ளி, கல்லூரி, ஆடிட்டோரியம், வர்த்தக மைய அரங்கை எல்லாம் நோயாளிகள், குவாரண்டைனில் இருப்பவர்கள் தங்கும் முகாமாக மாற்றும் அரசு ஏன் தனியார் மருத்துவமனைகளைக் கையகப்படுத்தவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் தற்போது அசாதாரணமான சூழல் நிலவுகிறது, 10, 15 பெரிய மருத்துவமனைகள் உள்ளன. இவற்றை கையகப்படுத்தி குறைந்த கட்டணம் வசூலித்தால் கூட பலரும் சிகிச்சை பெற முடியும். இவற்றை அரசு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மருத்துவமனைகளை கையகப்படுத்த முடியுமா, தொற்றுநோய் காலங்களில் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கை பற்றி தமிழக அரசு ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.