ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களை ஆவின் முகவர்களாக நியமிக்க எதிர்ப்பு!
தமிழகத்தில் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களை ஆவின் பால் முகவர்களாக நியமிக்க ஆவின் பால் முகவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக முடங்கியுள்ள ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில் நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமிக்க அவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக திருநெல்வேலி, நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு ஆவின் பால் முகவர்கள் மற்றும் விற்பனை பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்க நிர்வாகிகள் கூறுகையில், “தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் ஆவின் பால் முகவர்கள் உள்ளோம். தற்போது புதிதாக ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களும் பால் முகவர்களாக உரிமம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்கனவே உள்ள முகவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. ஆவின் பால் உற்பத்தி அதிகரிக்காத நிலையில், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு உதவ அரசு வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.