×

‘பப்ஜி மதனிடம்’ பணத்தை பறிகொடுத்ததாக 100க்கும் மேற்பட்டோர் புகார்!

யூடியூபில் பப்ஜி சொல்லிக் கொடுப்பது போல ஆபாசமாக பேசி பணத்தை குவித்து வந்தவர் பப்ஜி மதன். இவருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசில் 150க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்ததையடுத்து, போலீசார் மதன் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். அதில், இவரும் இவரது மனைவி கிருத்திகாவும் இணைந்து யூடியூபில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்ததும் இவர்களுக்கு ஒரு சில தோழிகள் உதவி செய்ததும் தெரியவந்தது. அதனடிப்படையில் மதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய வலை
 

யூடியூபில் பப்ஜி சொல்லிக் கொடுப்பது போல ஆபாசமாக பேசி பணத்தை குவித்து வந்தவர் பப்ஜி மதன். இவருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசில் 150க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்ததையடுத்து, போலீசார் மதன் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். அதில், இவரும் இவரது மனைவி கிருத்திகாவும் இணைந்து யூடியூபில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்ததும் இவர்களுக்கு ஒரு சில தோழிகள் உதவி செய்ததும் தெரியவந்தது.

அதனடிப்படையில் மதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய வலை விரித்தனர். இதைத் தெரிந்து கொண்ட மதன் தலைமறைவாகிவிட்டார். இவரது மனைவி கிருத்திகா மட்டும் போலீஸ் வசம் சிக்கினார். அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மதன் தர்மபுரியில் இருப்பதாக தெரியவந்தது. உடனே தர்மபுரி விரைந்த தனிப்படை போலீசார், அவரை சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நீதிமன்றத்தில் மதனை ஆஜர்படுத்துவதற்கு முன்னர், அவரிடம் விடிய விடிய சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஆபாசமாக பேசி கோடிக்கணக்கில் மதன் சம்பாதித்ததும் ஆடி கார்கள், பங்களாக்கள் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் ஆதரவற்றவர்களுக்கு உதவுவதாக கூறி பண மோசடி செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.

பப்ஜி மதனிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் இ-மெயில் மூலம் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதற்கான இ-மெயில் முகவரியையும் அளித்திருந்தனர். இந்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் கொடுத்த இ-மெயில் முகவரியில் 100க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆபாச பேச்சு பற்றி கண்டித்தும் பலமுறை திட்டியதாகவும் புகார்கள் குவிந்துள்ளன என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். பப்ஜி மதனை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.