குடிமைப் பணி தேர்வில் அதிக தமிழக மாணவர்கள் வெற்றி பெற வேண்டும்! – ராமதாஸ் வாழ்த்து!
குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தில் இருந்து 44 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துக் கூறியுள்ளார். வரும் ஆண்டுகளில் இன்னும் அதிக அளவில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய போட்டித் தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்ற 829 பேருக்கும் பா.ம.க சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், தேசிய அளவில் 36-ஆவது இடத்தை பிடித்துள்ள காரைக்காலைச் சேர்ந்த மாணவி சரண்யா புதுவையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். தமிழக அளவில் முதல் இரு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிக்கும், புதுவையில் முதலிடம் பிடித்த மாணவிக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி வரும் குடிமைப் பணி தேர்வுகளில் தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். அதற்காக இப்போதிலிருந்தே படிக்கத் தொடங்கி, வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.