“இரத்தம் காய்வதற்குள் மற்றொரு கஸ்டடி கொலை..தொடரும் துயரம்” – மு.க ஸ்டாலின் காட்டம்!
சாத்தான்குளம் சம்பவத்தை போன்று, கடலூரில் காவலர்களால் தாக்கப்பட்டு செல்வ முருகன் என்பவர் உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், கடலூர் பண்ருட்டியில் செல்வ முருகன் என்பவர் நெய்வேலி நகர காவல்நிலைய போலீசாரின் சித்திரவதைக்கு பலியாகி இருக்கிறார். சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு பிறகு உயர்நீதிமன்றம் எச்சரித்தும் போலீஸ் கஸ்டடி மரணங்கள் தொடர்கிறது. ‘உன் கணவர் மீது ஸ்டேஷனில் உள்ள திருட்டு வழக்குகளை எல்லாம் போட்டு விடுவோம்’ என்று எச்சரிக்கப்பட்டதால் தன் கணவனைக் காணவில்லை என்று மனைவி பிரேமா கொடுத்த புகாரை வாங்காமல் கடலூர், நெய்வேலி நகர காவல் நிலையங்களில் அலைக்கழித்தது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.
அதிமுக ஆட்சியில் காவல்துறை சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தடுமாறுகிறது. செல்வமுருகன் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து உண்மையான வழக்கிற்காகவா? பொய் புகாரிலா? மிருகத்தனமாக தாக்கிய போலீசார், காயங்களுடன் சிறைச் சாலையில் செல்லும் முருகன் அடைக்கப்பட்டது எப்படி? அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் யார்? தீவிரமாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கம்போல் மறைத்து தமிழக காவல்துறையின் எஞ்சி இருக்கின்ற பெருமையையும் முதலமைச்சர் சீர்குலைத்து விடவேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.