மதுரையில் அமைச்சர்களின் போட்டாபோட்டி… கொரோனா தடுப்புப் பணிகளை செய்ய முடியாமல் தவிக்கும் அதிகாரிகள்
மதுரையில் அமைச்சர்களின் போட்டாபோட்டி… கொரோனா தடுப்புப் பணிகளை செய்ய முடியாமல் தவிக்கும் அதிகாரிகள்
மதுரையில் இரண்டு அ.தி.மு.க அமைச்சர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு தினமும் நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிட்டுள்ளதால், கொரோனா பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தினசரி ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேட்டி அளிப்பது வாடிக்கையாக உள்ளது. மக்களுக்கு நலத்திட்ட உதவி, கொரோனா நிவாரண உதவி, கொரோனா தடுப்பு மையங்கள் ஆய்வு என்று இரண்டு அமைச்சரும் போட்டிப் போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யச் சொல்லி அதிகாரிகளை வற்புறுத்துவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காலையில் ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றால், மாலையில் மற்றொருவர் வேறு ஒரு இடத்தில் வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சில முறை இரண்டு, மூன்று நிகழ்ச்சிகள் கூட ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதனால் கொரோனா தடுப்புப் பணிகளில் கவனம் செலுத்துவதா, அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வதா என்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலையிட்டு அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். கொரோனா தடுப்புப் பணிகளில் அதிகாரிகளை முழுமையாக ஈடுபடுத்த அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் மதுரையும் அடுத்த சென்னையாக மாறாமல் இருக்கும் என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.