மதுரவாயல்: 100 குடும்பங்களுக்கு மளிகைப் பொருள் வழங்கிய ம.நீ.ம
மதுரவாயலில் 100 குடும்பங்களுக்கு மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் வழங்கினர்.
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு, தளர்வு, ஊரடங்கு என்று தொடர் அறிவிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு போதுமான நிவாரணம் வழங்காத நிலையில் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் பா.ஜ.க, தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகள் சார்பில் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மக்களுக்கு உதவிகள் வழங்குவதில் தி.மு.க-வுக்கு இணையாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர். மதுரவாயல் பகுதியில் மக்கள் நீதி மய்ய திருவள்ளூர் தென்மேற்கு கட்டமைப்பு மாவட்டச் செயலாளர் ஏ.பாசில் ஏற்பாட்டில் மதுரவாயல் தொகுதி, 155வது வட்டம், ராமபுரம், புதிய பதன நகர் பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சுமார் 100 குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் (மளிகைப் பொருட்கள்) வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மக்கள் நீதி மய்யம் இளைஞர் அணி செயலாளர் கவிஞர் சினேகன், தொழிலாளர்கள் அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி, இளைஞரணி சென்னை மண்டல செயலாளர் பால் பிரதீப், வி.கே.எம்,கேட்டர்ஸ் உரிமையாளர் வி.கே.எம்.சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினர்.