கொரோனாவைக் காரணம் காட்டி ஏலக்காய் தோட்டத்துக்குள் அனுமதிக்க மறுக்கும் கேரளா! – விவசாயிகள் வேதனை
தேனி மாவட்டத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி இடுக்கு மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்களுக்கு செல்ல தமிழக விவசாயிகளை கேரள அரசு மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டம் கம்பம், போடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தமிழக – கேரள எல்லையில் ஏராளமான ஏலக்காய்த் தோட்டம் உள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்துக்குள் அமைந்துள்ள தோட்டங்களுக்குச் செல்ல தமிழக விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் சமீப நாட்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அச்சம் காரணமாக தேனி விவசாயிகளுக்கு தங்கள் தோட்டங்களுக்கு தினமும் சென்று வருவதற்கான பாஸ் வழங்க கேரள அரசு மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தோட்டத்துக்கு சென்று செடியை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தேனி மாவட்ட நிர்வாகம் இடுக்கி மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி, ஏலக்காய் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் விவசாயம் செய்யும் தமிழக விவசாயிகளுக்கு உரிய அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.