மயிலாப்பூரின் பிரபல ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக மறைந்துவிட்டார் என்று செய்தி பரவிய நிலையில், நான் நலமாக உள்ளேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு நெல்லையின் புகழ்மிக்க இருட்டுக்கடை அல்லா உரிமையாளர் கொரோனா காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இது செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. நெல்லை இருட்டுக்கடை அல்லா உரிமையாளர் மட்டுமல்ல மயிலாப்பூரின் புகழ்மிக்க ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளரும் கொரோனாவால் உயிரிழந்தார் என்று சமூக ஊடகங்களில் பலரும் தகவல் பரப்பினர்.
இது உண்மையா என்று விசாரித்த போது, கொரோனா பாதிப்பு காரணமாக பஜ்ஜி கடை உரிமையாளர் சந்திரசேகரனின் சகோதரர் சிவராமகிருஷ்ணன் பலியானது தெரிந்தது. இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய கணக்காயர் அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 4ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்படவே, ராயப்பேட்டை ஜி.எச்-க்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் என்று தெரிந்தது.
இது குறித்து ஜன்னல் கடை உரிமையாளர் சந்திரசேகரன் கூறுகையில், “நான் நலமாக உள்ளேன். எனக்கு உறுதுணையாக இருந்த என் சகோதரரின் மரணத்தால் எங்கள் குடும்பம் சோகத்தில் உள்ளது. விரைவில் இதிலிருந்து மீண்டு, ஒரு மாதத்துக்குப் பிறகு பஜ்ஜி கடையைத் திறக்க உள்ளோம்” என்றார்.