×

ஹரியும் சிவனும் ஒன்னு என உலகிற்கு உணர்த்த அம்பிகை செய்த தவம். ஆடித்தபசு வரலாறு !

தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோயில் திருவிழாக்கள் முக்கியமான ஒன்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் சங்கரநாராயணர் ஆலய ஆடி தபசு விழா. கொரானா ஊரடங்கின் காரணமாக இந்த ஆண்டு ஆடி தபசு விழா தடைபட்டிருப்பது ஆன்மீக அன்பர்கள் அனைவருக்குமே வருத்தத்தை உணடுபண்ணி இருக்கிறது. ஆடிதபசு விழா என்பது புராண கால பெருமை மிக்கது .அதுமட்டுமல்ல சைவ வைஷ்ணவ தூவேஷத்தையும் சிவன் – விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற அவசியமற்ற சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவும் விரும்பியனாள் அம்பிகை. அவரது வேண்டுகோளை
 

தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோயில் திருவிழாக்கள் முக்கியமான ஒன்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் சங்கரநாராயணர் ஆலய ஆடி தபசு விழா. கொரானா ஊரடங்கின் காரணமாக இந்த ஆண்டு ஆடி தபசு விழா தடைபட்டிருப்பது ஆன்மீக அன்பர்கள் அனைவருக்குமே வருத்தத்தை உணடுபண்ணி இருக்கிறது.

ஆடிதபசு விழா என்பது புராண கால பெருமை மிக்கது .அதுமட்டுமல்ல சைவ வைஷ்ணவ தூவேஷத்தையும் சிவன் – விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற அவசியமற்ற சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவும் விரும்பியனாள் அம்பிகை. அவரது வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் அளித்த காட்சியின் சாட்சியாக நடைபெறுவது தான் ஆடிதபசு விழா.

 

அண்ணன் நாராயணரும் கணவர் சங்கரரும் அதாவது ஹரியும் சிவனும் ஒருவரே என்பதே உலகிற்கு உணர்த்த அம்பிகை மேற்கொண்ட தவத்திற்கு அதாவது தபசுக்கு பலன் கிடைத்த நாள் ஒரு ஆடி பௌர்ணமி தினத்தில் தான். அதுவே ஆதிகாலத்தில் இருந்து ஆடி தபசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சங்கன், பதுமன் என்ற நாக வம்ச அரசர்கள் இடையே ஒரு போட்டி இருந்தது. சிவனை வணங்குபவர் சங்கன். நாராயணரை வணங்குபவர் பதுமன் . சிவன்தான் பெரியவர் என்று சங்கன் வாதிட, இல்லை இல்லை நாராயணன் தான் பெரியவர் என்று பதுமன் சொல்ல இருவருக்குமே சண்டை எழுந்தது.

நாமாக ஏன் சண்டை போட வேண்டும் அதனை பார்வதிதேவியிடமே கேட்டு விடுவோம் என இருவரும் முடிவு செய்தனர். பஞ்சாயத்து பார்வதிதேவியிடம் வந்தது . அன்னை என்ன சொல்லுவாள் யாருக்கு ஆதரவாக கருத்து கூறுவாள். அன்னைக்கு தெரியாதா இருவருமே ஒருவர்தான் என்று. நேராக கணவர் சிவனிடம் போய் , ஹரியாகிய அண்ணனும், ஹரனாகிய நீங்களும் ஒருவர்தான் என்று மக்களுக்கு உணர்த்த வேண்டும் . அதற்கு நீங்கள் சங்கரநாராயணராக காட்சி தந்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்தாள்.

சிவனோ “நீ கேட்டவுடன் உடனே நடந்துவிடும் செயல் அல்ல அது. அவ்வளவு சீக்கிரம் நான் நீ வேண்டுவது போல் காட்சி அளித்து விடமுடியுமா? அதற்கான பிரயத்தனங்களை நீ ஆற்றத்தான் வேண்டும். அதாவது தவம் இருக்க வேண்டும்” என்றார்.

தவம் இருந்தால்தான் வரம் கிடைக்கும் என்று சிவன் உணர்த்தியதை உணர்ந்த அன்னை பார்வதி, “நான் தவம் மேற்கொள்ள இடம் ஒன்றை அய்யன் காட்டியருள வேண்டும்” என்றாள்  புன்னை மரங்கள் நிரம்பிய வனத்தில் அவற்றுடன் புன்னை மரங்களாக வடிவமேற்று முனிவர்கள் ஈசனை நோக்கி தவம் இருக்கும் தலத்தை காட்டினார் சிவபெருமான்.

ஈசன் காட்டிய இடம்நோக்கி பூலோகம் வந்த உமாதேவி அன்னை ஆவுடை நாயகியாக ஒற்றைக்காலில் ஊசி முனையில் சிவனை நோக்கி கடும் தவம் இருந்தாள். தவத்தில் நாட்கள் வாரங்கள் மாதங்கள் ஆண்டுகள் பல கடந்தன.

அன்னையின் தீவிர தவத்தில் ஆடியபாதனின் மனம் நெகிழ்ந்தது. ஒரு ஆடி மாத பௌர்ணமி தினத்தில் வானத்தில் முழுநிலா ஒளி வீசும் நன்நாளில் இறங்கி வந்த சிவபெருமான். புன்னை வனம் வந்து உமாதேவி தவத்தின் பலனாக அன்னைக்கு சங்கரநாராயணராக காட்சி அளித்தார்.

தவத்தை நிறைவு செய்த அன்னை அந்த காட்சி கண்டு மனமகிழ்ந்தாள். சண்டை போட்ட நாகர்கள் சங்கனையும் பத்மனை அழைத்து காண்பித்தாள். இந்திராதி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், மக்கள் சகல ஜீவாராசிகளும் அந்த அரிய காட்சி கண்டு உள்ளம் பூரித்தனர். அந்த காட்சியின் சாட்சியாகத்தான் இன்றும் யுகங்களை கடந்து சங்கரன்கோயிலில் ஆடிதபசு விழா நடக்கிறது. சைவ வைஷ்ண பேதமின்றி திரண்டு மக்கள் பங்கேற்று வழிபடுகின்றனர்.

ஒரு புறம் சிவப்பு, மறு புறம் சியாமளம். ஒரு புறம் கங்கை சந்திரன் சடைமுடி, மறு புறம் வஜ்ர மாணிக்க மகுடம் . ஒரு புறம் மழு, மறு புறம் சங்கு . ஒரு புறம் புலித்தோல், மறு புறம் பீதாம்பரம். ஒரு புறம் ருத்திராட்சம், மறு புறம் துளசி மாலை . ஒரு புறம் வைணவ பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்க; மறு புறம் சைவ சங்கன் பெருமாளுக்குக் குடை பிடிக்க அரிஹரனாய் சங்கரநாரயணராய் சிவனும் விஷ்ணுவும் காட்சி தரும் திருகோலத்தை ஒருமுறை சங்கரன்கோயில் திருத்தலம் சென்று தரிசித்து வாருங்கள் இறைவன் அருள் கைகூடும்.

அரிஹரனாய் காட்சி தந்த இறைவனை கண்டு உளமுருகி நின்ற பார்வதியிடம் “வேண்டிய வரங்களைக் கேள் ” என்றார் சிவபெருமான். ‘இத்திருக்கோலம் ஒருபுறமிருக்க , உங்கள் திருஉருவுடன் இத்தலத்தில் என்னுடன் தங்கவேண்டும் ‘ என்று அம்பாள் வேண்டி நின்றாள் . அதன்படி சிவனும் சங்கரலிங்க வடிவமாக புன்னைவனத்தில் உமாதேவியருடன் எழுந்தருளி கோமதி அம்பாளுடன் பக்தர்களுக்கு அருளி வருகிறார.

நாகர்களான சங்கன்,பதுமன் வழிபட்ட தலம் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண் பிரதான பிரசாதமாக வழங்கப்படுகிறது . இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிட்டால் தீரா நோயும் தீரும் உடலில் பூசிக்கொள்ள சரும நோய்கள் நீங்கும். மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை .

தவமிருந்த அன்னைக்காக பக்தர்கள் ஆடிச்சுற்று சுற்றுகின்றனர். ஆடித் தபசு கொடியேறிய பின் ‘ஆடிச்சுற்று’ என்ற பெயரில், பக்தர்கள் கோயிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் சுற்றுவார்கள். ஆடிச்சுற்று சுற்றுவதால், ஒரு காலில் நின்று தபசு காட்சி காணும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

தவக்காலத்தில் கோமதி அம்மனை சுற்றினால் தங்களது வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். கொடியேற்றம் துவங்கியதிலிருந்து தினமும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் அம்மனின் அருள் வேண்டி காலை, மாலை வேளைகளில் கோயில் பிரகாரத்தில் சுற்றி வருகின்றனர். உள்ளுர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூரிலிருந்தும் திரளான பக்தர்கள் ஆடிச்சுற்று சுற்றி வருகின்றனர் .

நாகாபரணன் சிவனும் பாம்பனை வாசனும் விஷணுவும் சேர்ந்த காட்சி தரும் சங்கரன்கோயிலில் அன்னை கோமதிநாயகி கோலத்தையும் தரிசித்தது பலன் பெறுவோம்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி