×

கோடி புண்ணியம் தரும் குரு பார்வை!

ஒரு சாதாரண ரிஷியாக இருந்த பிருகஸ்பதி, அவர் கற்றறிந்த வேதங்களும், 64 கலைகளும், அனைவருக்கும் நன்மை பயக்க செய்து வந்த பல்வேறு வேள்வி காரணமாகவும், சரியான நேரத்தில் சரியான ஆலோசனை வழங்கி வந்ததால் இவர் தேவர்களின் குருவாக உயர்ந்தவர். நவகிரகங்களில் ஒருவர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர். இதன் காரணமாக இவரின் பார்வைப்பட்டாலே நமக்கு கோடி புண்ணியம் வந்து சேரும் என்பதை உணர்த்தும் வகையில், ‘குரு பார்த்தால் கோடி புண்ணியம்’ என போற்றப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ராசியில் குரு
 

ஒரு சாதாரண ரிஷியாக இருந்த பிருகஸ்பதி, அவர் கற்றறிந்த வேதங்களும், 64 கலைகளும், அனைவருக்கும் நன்மை பயக்க செய்து வந்த பல்வேறு வேள்வி காரணமாகவும், சரியான நேரத்தில் சரியான ஆலோசனை வழங்கி வந்ததால் இவர் தேவர்களின் குருவாக உயர்ந்தவர். நவகிரகங்களில் ஒருவர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர். இதன் காரணமாக இவரின் பார்வைப்பட்டாலே நமக்கு கோடி புண்ணியம் வந்து சேரும் என்பதை உணர்த்தும் வகையில், ‘குரு பார்த்தால் கோடி புண்ணியம்’ என போற்றப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட ராசியில் குரு பகவான் சுப பாவங்களில் அமர்ந்து சுப பலன்களை அந்த ஜாதகருக்கு அளிக்க வல்லவர். குரு பகவான் சுப கிரகம். பொன்னவன், குரு பார்வை கிடைத்தால் கோடி நன்மைகள் வந்து சேரும் என்பார்கள். எனவேதான் திருமணம், குழந்தை பாக்கியம், வேலையில் உயர்வு, வருமானத்தில் உயர்வு, நோய் நொடியற்ற வாழ்க்கை வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

குருப்பெயர்ச்சி நிகழும் தேதி!

தற்போது நிகழவுள்ள குருப்பெயர்ச்சியானது நிகழும் சார்வரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி ஐப்பசி 30ஆம் தேதி (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை அன்று குரு பகவான் தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ஆம் பாதத்திலிருந்து, மகர ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 2ஆம் பாதத்திற்கு ஞாயிற்றுக் கிழமை இரவு 9.50 மணிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். திருக்கணித பஞ்சாங்க முறைப்படி கார்த்திகை 5ஆம் தேதி (20.11.2020) அன்று அதாவது வெள்ளிக்கிழமை பகல் 1. 23 மணிக்கு பெயர்ச்சி ஆவார் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆலங்குடி 24 விளக்கு, 24சுற்று!

நவக்கிரக பரிகார ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குருபகவான் பரிகார தலங்களில் முதல் தலமாகவும் உள்ளது. ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் பிரகாரத்தின் இடது புறம் தட்சிணாமூர்த்தியாக இங்கு குரு பகவான் அருள் புரிகிறார். மேலும் இத்தலம் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்றாகும். இங்கு அவரை வழிபடுவது மிகவும் உகந்ததது.

இங்கு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபடுகிறார்கள். தமது சீடர்களுக்கு 24 அட்சரங்கள் உள்ள மந்திரத்தை உபதேசித்தார் என்பதால் இந்த வழிபாடு முறை தொடர்ந்து வருகிறது. வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை சமர்பித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்தக் குரு பகவானை வழிபடுவது சிறப்பு.

குரு வழிபட்ட தலம்!

சென்னை வில்லிவாக்கம் அருகில் பாடியில் உள்ள வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும். இங்கு குருபகவான் தனி சன்னதியில் சிவனை வணங்கும் விதமாக மேற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இவரை குருப்பெயர்ச்சி அன்று வழிபடுவது ரொம்ப நல்லது.

ராஜயோகத்தைத் தரும் ராஜ குரு!

தஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் தென் திட்டை என்ற இடத்தில் ராஜகுரு கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மங்காம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவனும் இறைவியும் அருள்புரிந்து வருகின்றனர். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலமாகும். இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

குருவித்துறை குரு!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர்.

காசிக்கு நிகரான தலம்!

காசிக்கு நிகரான தலம் மயிலாடுதுறையில் கோயில் கொண்டுள்ள மயிலாடுதுறை மயூரநாதர் – மேதா தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள மயூரநாதரை குரு பகவான் வழிபட்டதாக ஐதீகம். இங்கு தட்சிணாமுர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோயிலில் தட்சிணாமுர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும். காசிக்கு நிகரான ஆறு தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று. இதே போல காஞ்சிபுரம் அருகே அகரம் கோவிந்தவாடியும் குரு பரிகார தலமாக திகழ்கிறது.

ஆலமர தட்சிணாமூர்த்தி!

சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் கிழக்கு நோக்கிய அனுக்கிரஹ தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரது சன்னதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னதி அமைந்துள்ளது. இவரது சன்னதி முன் மண்டபத்தில் 12ராசிக்களின் கட்டம் வடிக்கப்பட்டுள்ளது.

தக்கோலம் குருவும், மேதா தட்சிணாமூர்த்தியும்!

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் – பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. இந்த ஸ்தலத்தில் குரு பகவான் வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.இது குருபகவானுக்கு சிறந்த பரிகார தலமாகும்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீதன்வந்திரி பகவான் ஆலயத்தில் குருபகவான் மேதா தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். இவரை வழிபட கல்வி செல்வமும் அதிகரிக்கும். குருப்பெயர்ச்சி நாளில் சிறப்பு யாகங்களும் நடைபெற உள்ளது.