கொரோனாவில் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்… கட்டணத்தை நாளை அறிவிப்பதாக விஜயபாஸ்கர் தகவல்
தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்ற விவரத்தை நாளை வெளியிடுவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அறிகுறிகளுடன் வரும் பலரையும் வீடுகளுக்கு அனுப்பி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. மருத்துவமனை படுக்கைகள் நிரம்பி வழிவதால் புதிதாக அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
கொரோனா சிகிச்சைக்கு என்று பல லட்ச ரூபாய்களை தனியார் மருத்துவமனை வசூல் செய்தது பற்றி செய்தி வெளியான நிலையில் தமிழக அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டபோது, “தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்ற அறிவிப்பு நாளை வெளியாகும்” என்றார்.