கடன் வழங்கலாம்! – கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
கூட்டுறவு வங்கிகளில் கடன் கொடுப்பதை மீண்டும் தொடங்கும்படி தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கொரோனா பாதிப்பு காரணமாக முடங்கிப் போய் உள்ள மக்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் பெற கூட்டுறவு வங்கிகளை நாடி வருகின்றனர். ஆனால், தமிழகம் முழுக்க உள்ள கூட்டுறவு வங்கிகளில் போதிய பணம் இன்மை காரணமாக கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது. இதுவே தனியாரிடம் சென்றால் வட்டி அதிகம். இதனால் வங்கியில் நகைக் கடன் பெற முடியாமல் அவதியுறுவதாக விவசாயிகள், சிறு வணிகர்கள், பொது மக்கள் வேதனை தெரிவித்தனர். இதற்கு தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளில் நிறுத்தி வைத்திருந்த கடன் வழங்கும் பணியை மீண்டும் தொடங்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்துவிதமான கடனை வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இல்லாமல் வாய்மொழி உத்தரவாக இதை தமிழக அரசு தெரிவித்துள்ளதாகவும் கூட்டுறவு வங்கிகள் தெரிவித்துள்ளன.