விநாயகர் சிலை விவகாரம்… கொரோனா பரவல் இருந்தாலும் தடையை மீறுவோம்! – இந்து முன்னணி அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை அமைக்க தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி விநாயகர் சிலையை அமைப்போம் என்று இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலை அமைப்பது தொடர்பாக தடை உள்ள நிலையில் இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் கலெக்டர் பொன்னையா ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. கொரோனா பரவல் உள்ளதால் ஊர்வலம் நடத்த அனுமதிக்க முடியாது. சிறிய கோவில்களில் வழிபாடு நடத்தலாம். அங்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பொது மக்கள் அமைதியான முறையில் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு இந்து முன்னணி நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, “பொது இடங்களில் விநாயகர் சிலை அமைக்க அனுமதி இல்லை என்று
கலெக்டர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில் விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபாடு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளோம். தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 1.5 லட்சம் விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடத்த இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது. அனுமதி அளிக்காவிட்டால் தடையை மீறி சிலை அமைக்கப்படும்” என்றார்.