முன்னாள் எம்.எல்.ஏ மு.அம்பிகாபதி மரணம்! தலைவர்கள் அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் மன்னார்குடி சட்டசபை தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான மு.அம்பிகாபதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் மன்னர்குடி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றவர் மு.அம்பிகாபதி. இடதுசாரி சிந்தனைகளில் ஆழம் கண்ட அம்பிகாபதி காவிரி டெல்டா மக்களின் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடியவர். இயக்கத்தில் புதிதாக வருபவர்களை வளர்த்தெடுப்பதிலும் மகத்தான பணியை மேற்கொண்டார். அதற்கு சாட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரனின் பதிவு.
1971 ஆம் ஆண்டு மன்னை கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் செயல்பாடுகளில் தீவிரமாக இருந்த ஆரம்ப காலத்திலேயே மு.அம்பிகாபதியோடு நெருங்கிய தோழமை கொண்டு இருந்தேன். அப்பொழுதெல்லாம் எனக்கு மிகுந்த ஊக்கத்தை தந்தவர்.
கலை இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். சட்டமன்றத்தில் அவர் முன்வைத்த பல விவாதங்கள் உயிர்ப்பு கொண்டவை. ஒரு காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் அவர் இருந்தபோது, சொல்லின் செல்வர் ஈ.வி. கே சம்பத், கவிஞர் கண்ணதாசன் ஆகியோரோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்.
1977ஆம் ஆண்டு மன்னார்குடி சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்ட போது, அவருக்கான தேர்தல் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டது எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. சுவரில் வெள்ளையடித்து காவியை கரைத்து, அவரது பெயரையும் கதிர் அரிவாள் சின்னத்தையும் எனது கையாலேயே வரைந்ததை நான் இப்பொழுது நினைத்துப் பார்க்கின்றேன்.
அந்த காலத்திலிருந்து அவரது குடும்பத்தினரோடு நான் கொண்ட அன்பும் பிரியமும் மிக ஆழமானது. அவருடைய பிள்ளைகள் அனைவரும் என்னை குடுபத்தில் ஒருவராக நினைப்பவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்திருக்கும் அஞ்சலி குறிப்பில், ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியிலிருந்து, 1977 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணியாற்றிய திரு. மண்ணை மு அம்பிகாபதி அவர்கள் நேற்று மாலை (14-7-2020) மறைவுற்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்தித்து, அவரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்திரனருக்கும் கழக தோழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.