சாலை வரியிலிருந்து விலக்கு… ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்துக்கு சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் முடங்கியிருந்த ஓட்டுநர்களுக்கு அரசு நிவாரண உதவி எதையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் சாலை வரியை செலுத்த அரசு வற்புறுத்தி வருகிறது. வருவாய் இல்லாத நிலையில் சாலை வரியாக மட்டும் ஆம்னி பஸ்கள் லட்சக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் ஆறு மாதங்களுக்கு சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு ஆறு மாத சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். காப்பீடு செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு காரணமாக வாழ்வாதாரம் முடங்கிப் போய் உள்ளதால், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகையில் இருந்து வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
வாகனங்கள் கடந்த நான்கு மாதமாக இயங்கவில்லை, வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி வரை இயங்கவும் அனுமதி இல்லாத நிலையில் அவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்றி அவர்களுக்கு உதவ வேண்டும்.