காலாண்டு, அரையாண்டில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி! – தேர்வுத் துறை இயக்குநர் அறிவிப்பு
10ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் கணக்கீட்டில் காலாண்டு, அரையாண்டில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசின் உத்தரவைக் கேள்விக்குறியாக்கும் வகையில் சில தனியார் பள்ளிகள் மதிப்பெண்களை திருத்துவதாக, கூட்டி, குறைத்து வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியிருந்தார்.
காலாண்டு, அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் இதனால் ஆசிரியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளதாகவும் செய்தி வெளியான நிலையில் இந்த உத்தரவைத் தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகம் பிறப்பித்துள்ளது.