ஜெகத்ரட்சகனுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை… இடைக்கால தடைவிதித்த சென்னை உயர் நீதிமன்றம்!
குரோம்பேட்டை தொழிற்சாலை தொடர்பாக தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
வி.பி.துரைசாமி, கு.க.செல்வத்தைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க எம்.பி-யுமான ஜெகத்ரட்சகன் பா.ஜ.க பக்கம் செல்வார் என்ற பேச்சு உள்ளது. ஆனால், இதை ஜெகத்ரட்சகன் மறுத்து வருகிறார். அவரை பா.ஜ.க பக்கம் இழுக்க அவர் மீதான வழக்குகளை, குற்றச்சாட்டுகளை மத்திய அரசு தூசிதட்டி வருகிறது என்று கூறப்படுவது உண்டு.
இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள க்ரோம் தொழிற்சாலைக்கு உரிமைகோரி தாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கு தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இதை எதிர்த்து ஜெகத்ரட்சகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில், “இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தாஸ் என்பவர் அளித்த புகார் பற்றி தமிழக டி.ஜி.பி விசாரித்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த விவகாரம் நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகத்ரட்சகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குரோம்பேட்டை தொழிற்சாலை முறைப்படி வாங்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பான வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதிதாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது சட்ட விரோதம்” என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு நான்கு வாரத் தடை விதித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.