சேலம் எட்டு வழி சாலை வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும்! – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
சேலம் எட்டு வழி சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
சென்னையில் இருந்து சேலத்துக்கு எட்டு வழி பசுமை சாலை அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தாமல் எதற்காக விவசாய நிலங்கள், காடுகளை அழித்து சாலை அமைக்க வேண்டும் என்று கேள்வி எழுந்தது. புதிய சாலையில் இரண்டு மணி பயண நேரம் குறையும் என்று கூறி அந்த சாலை கட்டாயம் வேண்டும் என்று தமிழக அரசு உறுதியாக இருந்தது. ஆனால், இதற்கான அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், “கொரோனா தொற்றால் நாடே அவதி பட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில், 8வழிச்சாலை வழக்கை அவசரமாக விசாரிக்க, மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது? மக்களின் உணர்வுகளை தொடர்ச்சியாக உதாசீனப்படுத்தியவர்களை காலம் தூக்கி ஏரிந்துள்ளது” என்று கூறியுள்ளார்.