×

“மதத்தின் பெயரால் கோவில்களில் துன்புறுத்தப்படும் யானைகள்” – முடிவு கட்டும் நேரமிது என ஹைகோர்ட் கருத்து!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாகவும், பாகன்கள் நியமிப்பது தொடர்பாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகள் படி, கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா, எத்தனை யானைகள் உள்ளது என பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, முதன்மை
 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாகவும், பாகன்கள் நியமிப்பது தொடர்பாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகள் படி, கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா, எத்தனை யானைகள் உள்ளது என பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகம் முழுதும் 30 யானைகள் கோவில்களில் வளர்க்கப்படுவதாகவும், முறையான இடத்தில் பராமரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் குறுக்கிட்டு, 30 மட்டும் என்பது தவறு என்றும், 34 யானைகள் கோயில்களில் வளர்க்கப்படுவதாகவும், பாதிக்கு மேற்பட்ட யானைகளுக்கு பாகன்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அவற்றின் கால்கள் கட்டப்பட்டு 8 மணி நேரத்திற்கும் மேலாக நிற்கவைக்கப்படுவதாகவும், ஸ்ரீரங்கம் கோயில் யானைக்காக பிரத்யேக இடத்தை ஒதுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். அப்போது தலைமை நீதிபதி, இன்று காலை குதிரை ஒன்று மெரினா சாலையின் குறுக்கே வந்துவிட்டதாகவும், உடனடியாக காரிலிருந்து இறங்கி உதவ வேண்டுமென மனம் பதைபதைத்தாக குறிப்பிட்டார். பின்னர் மதத்தின் பெயரால் 2,000 சதுர அடி அளவிலான கான்கிரீட் தளத்தில் யானைகளை பராமரிப்பதற்கு பதிலாக, இயற்கையான வனப்பகுதியில் பராமரிக்கலாமே என நீதிபதிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக 100 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கோவில்களின் யானைகளை இயற்கையான பசுமையான இடத்தில் பராமரிக்கலாம் எனவும், விழாக்காலங்களில் மட்டும் கோவிலுக்கு அழைத்து வராலாம் எனவும் அரசுக்கு யோசனை தெரிவித்தனர். கான்கரீட் பகுதியில் யானை வளர்ப்பை தடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்த நீதிபதிகள், சங்கிலியால் யானைகளை கட்டக்கூடாது எனவும், யானைகளின் நலனை உறுதி செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்படி தலைமை வனப்பாதுகாவலருக்கு அறிவுறுத்தினர். யானைகளின் அன்றாட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.