×

களையிழந்த மாங்கனி திருவிழா : கோயிலுக்குள்ளேயே நடந்து முடிந்ததால் பக்தர்கள் கவலை!

சிவபெருமானின் அற்புதத்தை போற்றி பாடிய அறுபத்துமூன்று நாயன்மார்களில் முதன்மையாக விளங்குபவர் காரைக்கால் அம்மையார். புதுச்சேரியில் உள்ள காரைக்கால் என்ற ஊரில் ஒரு வணிகக் குடும்பத்தில் செல்வந்தர் மகளாக புனிதவதி என்ற பெயரில் பிறந்த இவர் பரமதத்தன் என்பவரை மணமுடித்து வாழ்ந்து வந்தார். சிவனின் மீது தீராத பக்தி கொண்ட இவர் அவரின் திருவிளையாடலில் சிக்கினார். ஒருநாள் பரமதத்தன் இரண்டு மாங்கனிகளை புனிதவதி இடம் கொடுத்தார். பணி காரணமாக பரமதத்தன் வெளியில் செல்ல சிவபெருமான் சிவனடியார் வேடம் பூண்டு
 

சிவபெருமானின் அற்புதத்தை போற்றி பாடிய அறுபத்துமூன்று நாயன்மார்களில் முதன்மையாக விளங்குபவர் காரைக்கால் அம்மையார். புதுச்சேரியில் உள்ள காரைக்கால் என்ற ஊரில் ஒரு வணிகக் குடும்பத்தில் செல்வந்தர் மகளாக புனிதவதி என்ற பெயரில் பிறந்த இவர் பரமதத்தன் என்பவரை மணமுடித்து வாழ்ந்து வந்தார். சிவனின் மீது தீராத பக்தி கொண்ட இவர் அவரின் திருவிளையாடலில் சிக்கினார்.

ஒருநாள் பரமதத்தன் இரண்டு மாங்கனிகளை புனிதவதி இடம் கொடுத்தார். பணி காரணமாக பரமதத்தன் வெளியில் செல்ல சிவபெருமான் சிவனடியார் வேடம் பூண்டு பிச்சை கேட்டு வந்தார். அப்போது வீட்டில் உணவு ஏதும் இல்லாததால் புனிதவதி கணவர் கொடுத்த இரண்டு மாங்கனிகளில் ஒன்றை சிவனடியாரிடம் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து வந்த பரமதத்தன் புனிதவதியிடம் சாப்பிட மாம்பழத்தை கேட்டபோது புனிதவதி மீதமிருந்த ஒரு மாம்பழத்தை தனது கணவரிடம் கொடுத்தார்.

மாம்பழம் மிகவும் ருசியாக இருந்ததால் மற்றொன்றையும் எடுத்துவர புனிதவதிக்கு கணவன் பரமதத்தன் கட்டளையிட்டார். ஆனால் அதை சிவனடியாரிடம் கொடுத்துவிட்ட நிலையில் கணவரிடம் எப்படி இல்லை என்று கூறுவது என்று தயங்கியபடியே சிவனை நோக்கி வேண்டினாள் அன்னை. உடனே அவள் கைகளில் ஒரு மாம்பழம் வந்து சேர்ந்தது. அந்த மாம்பழம் முன்பு இருந்த மாங்கனியை விட மிகவும் ருசியாக இருந்தது. இதுகுறித்து கணவன் பரமதத்தன் புனிதவதியிடம் கேட்க புனிதவதி ஈசனின் அருளால் தனக்கு இந்த மாம்பழம் கிடைத்ததாக கூறினாள்.

ஆனால் புனிதவதி சொன்னதை அவரது கணவன் பரமதத்தன் ஏற்க மறுத்தார். இதனால் புனிதவதி பரமதத்தன் முன்பு மீண்டும் ஈசனை நோக்கி வேண்டினாள். அப்போது அவள் கைகளில் மீண்டும் ஒரு மாம்பழம் வந்து சேர்ந்தது. இதை கண்ட பரமதத்தன் பயத்தில் நடுங்கினான். இதனால் புனிதவதியை ஒரு மாயக்காரி என எண்ணி அவரிடம் இருந்து பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொண்டார்.

இதனால் மனம் நொந்து போன புனிதவதி ஈசனின் அருளைப் புரியாதவர்கள் கூட இந்த உலகில் இருக்கிறார்கள் என்று எண்ணி வருந்தினாள். மேலும் சிவபக்தியை பரப்ப ஆயத்தமான அவர் தன்னை முழுவதுமாக சிவனிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். ஆனால் இளமையான உருவம் அதற்கு தடையாக இருக்குமோ என்று எண்ணி அவர் ஈசனை நோக்கி தனது இளமை உருவத்தை மாற்றி பேய் போன்ற உருவத்தை தருமாறு பாடினார். புனிதவதியின் கோரிக்கையை ஏற்று அவரது உருவத்தை மாற்றினார் ஈசன் . பேய் உருவோடு அவர் சிவத்தலங்கள் அனைத்திற்கும் சென்று சிவனைப் பாடினார். சிவனைப் போற்றிப் பாடி வந்த அவர் கயிலாயம் அடைந்தார் என புராணங்கள் கூறுகிறது.

கயிலாயம் அடைந்த அன்னை சிவபெருமான்தான் இந்த கயிலாயத்தில் குடி கொண்டிருக்கிறார். அதனால் இங்கு தன் காலால் நடக்க மாட்டேன் என்று கூறி தலையை கொண்டு மலை ஏறினார். இதை கண்டு மனம் கனிந்த ஈசன் காரைக்கால் அம்மையாரை ‘அம்மா’…. என்று அழைத்ததாக சிவ புராணங்கள் தெரிவிக்கின்றன. ஈசனிடம் பிறவாமை என்ற வரம் வேண்டும் என்று வேண்டிய காரைக்காலம்மையாருக்கு ஈசன் திருவாலங்காட்டில் நடன திருக்காட்சி அளித்து முக்தி அளித்தார்.

புனிதவதியாருடன் சிவன் நிகழ்த்திய மாம்பழ லீலைகளை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் மாங்கனித் திருவிழா காரைக்காலில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு மாங்கனி திருவிழா களையிழந்தது. ஈசனுக்கு பக்தர்கள் மாம்பழங்களைக் காணிக்கையாக்குவதே மாங்கனித் திருவிழா. அந்த நாளில் மாம்பழங்களை பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வீசியெறிவர். அதைப் பிற பக்தர்கள் பிடித்துக்கொள்வர்.

இந்த முறை கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த திருவிழா கோயிலுக்குள்ளேயே நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவின் போது தெருவுக்கு தெரு மாங்கனிகள் வீசப்படுவதுடன் கடைகளும் களைக்கட்டும். அதெல்லாம் இந்த முறை இல்லாமல் போனது. பக்தர்கள் மாங்கனி திருவிழாவை இணையம் வழியாகவே தரிசிக்க வேண்டி இருந்தது.