×

வைதீக மரபை புதுப்பிக்க வரம் தரும் விசேஷம்… ஆவணி அவிட்டம் சிறப்பு!

ஆவணி அவிட்டம் நமது வைதீக மரபை புதுப்பித்துக்கொள்ள கடைப்பிடிக்கப்படும் ஒரு முக்கிய விசேஷம். இந்துகளுக்கு பொதுவான பல பண்டிகைகள் வழிபாட்டுமுறைகள் இருந்தாலும் கூட ஒவ்வொரு வகுப்பினருக்கும் சில தனித்தன்மை மிக்க சடங்குகள் சம்பிரதாயங்கள் உண்டு. ஒவ்வொரு பிரிவினருக்கும் சில ஆசாசார அனுஷ்டனம் உண்டு. குலவழக்கம், குடும்பப்பழக்கம் என சில பிரத்யோக் முறைக்கள் கடைப்பிடிக்கப்படுவது உண்டு. அது போன்ற ஒன்றுதான் முப்பரிநூல் எனப்படும் பூணூல் அணிதல். பிரமணர்கள் மட்டுமின்றி வைசியர்கள், விஷ்வகர்ம வகுப்பினர், செட்டியார்களில் ஒரு பிரிவினர் என
 

ஆவணி அவிட்டம் நமது வைதீக மரபை புதுப்பித்துக்கொள்ள கடைப்பிடிக்கப்படும் ஒரு முக்கிய விசேஷம். இந்துகளுக்கு பொதுவான பல பண்டிகைகள் வழிபாட்டுமுறைகள் இருந்தாலும் கூட ஒவ்வொரு வகுப்பினருக்கும் சில தனித்தன்மை மிக்க சடங்குகள் சம்பிரதாயங்கள் உண்டு. ஒவ்வொரு பிரிவினருக்கும் சில ஆசாசார அனுஷ்டனம் உண்டு. குலவழக்கம், குடும்பப்பழக்கம் என சில பிரத்யோக் முறைக்கள் கடைப்பிடிக்கப்படுவது உண்டு. அது போன்ற ஒன்றுதான் முப்பரிநூல் எனப்படும் பூணூல் அணிதல்.

பிரமணர்கள் மட்டுமின்றி வைசியர்கள், விஷ்வகர்ம வகுப்பினர், செட்டியார்களில் ஒரு பிரிவினர் என பல தரப்பினரும் கூட பூணூல் அணிவது உண்டு.

பொதுவாக ஆவணி அவிட்டம் என்றதும் பூணூல் மாற்றும் சடங்கே நினைவுக்கு வரும். ஆனால், வெறும் பூணூல் மாற்றும் சடங்காக மட்டும் ஆவணி அவிட்டம் இல்லை. அது வேதக் கல்வியைத் தொடங்கும் நாள் என்கின்றன சாஸ்திரங்கள். கல்வி கற்பதையும் கற்பிப்பதையும் போற்றும் விழா ஆவணி அவிட்டம். முற்காலத்தில் எல்லா விதமான கல்வியையும் கற்பதற்கு சிறுவர்களை அனுப்பும் முன்பாக அவர்களுக்கு உபவீதம் என்னும் பூணூலை அணிவித்து காயத்ரி மந்திரம் உபதேசித்து அனுப்பும் வழக்கம் இருந்தது. பிற்காலத்தில் அந்த வழக்கம் மாறி குறிப்பிட்ட சில சமூகத்தினர் மட்டுமே அதை அணியும் வழக்கம் உள்ளது.

ஆவணி அவிட்டத்தன்று கல்வியைத் தொடங்குவதை ‘உபாகர்மா’ என்று சொல்கிறார்கள். பொதுவாக ‘ஸ்ராவண மாதம்’ எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட ஆடி அமாவாசை முதல் ஆவணி அமாவாசை வரையிலான மாதத்தில் அவிட்ட நட்சத்திர நாளில் அல்லது பௌர்ணமி திதியில் ஓர் ஆண்டுக்கான கல்வி தொடங்குகிறது.

ரிக் வேதிகள் ஸ்ராவண மாதத்தில் வரும் அவிட்ட நட்சத்திரத்தன்றும் யஜூர் வேதிகள் ஸ்ராவண மாத பௌர்ணமி திதி அன்றும் உபாகர்மாவைச் செய்கின்றனர். ஸாம வேதிகள் ஆவணி மாத ஹஸ்த நட்சத்திரத்தன்று (விநாயகர் சதுர்த்தி) உபாகர்மாவைக் கடைப்பிடிக்கிறார்கள். சில ஆண்டுகள் பௌர்ணமி திதியும் அவிட்ட நட்சத்திரமும் இணைந்தே வரும் நாளில் அல்லது அடுத்தடுத்த நாள்களில் வரும்.

இறைவன் நாம் இந்த பூமி சகல ஐஸ்வர்யங்களையும் பார்ப்பதற்கு நன்மை தீமைகளைப் பகுத்து அறிவதற்கு நமக்கு அளித்த கண்கள் இரண்டு. ஆனால், நாம் நம் புத்தக அறிவைத் தாண்டி இறைவனை அறியவும் இறை சிந்தனையுடன் திகழவும் நமக்கு ஞானக்கண் என்னும் இன்னுமொரு கண் தேவை. அந்தக் கண் கொண்டு பார்க்கத்தொடங்கும் வைபவமே ‘உபநயனம்’ எனப்படுகிறது. உபநயனம் என்றால் ’நமக்கு துணையாக வரும் இன்னுமொரு கண்’ என்று பொருள்.

உபநயனம் செய்வது என்பது ஒரு தொடக்க நிகழ்ச்சிதானே தவிர, அந்த நாள் முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் ஆகியவற்றை நாம் முறையாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம். ஒரு குருவின் துணையுடன் இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்வதுதான் இதன் நோக்கம். வீட்டுப் பெரியோர், தகப்பனார், ஆச்சார்யர் ஆகியோர் மூலமாகத்தான் உபநயனம் செய்விக்கப்படுகிறது.

உபநயனம் செய்விக்கப்பட்டபின் தாங்கள் அணிந்த பூணூலை, ஆண்டுதோறும்  ஆவணி அவிட்ட நாளில் மாற்றி புதிய பூணூல் அணிவார்கள். அதுவே ஆவணி அவிட்ட நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடியில் வரலட்சுமி விதம், காராடையான் நோன்பு போன்று பல விரதங்கள் பெண்களுக்கு உள்ளன. ஆண்களுக்காக இருக்கும் விழா ஆவணி அவிட்டம்.

வேத பாடங்களைப் பாராயணம் செய்து படிப்பதற்கு உத்தராயண காலத்தையும் அதன் உட்கருத்துக்களை, உப நூல்களையும் அறிந்து கொள்வதற்கு தக்ஷிணாயன காலத்தையும் நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள். அப்படி ஆண்டு முழுவதும் படிக்கும்போது ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்திட,  ஆவணி அவிட்ட நாளில் வழக்கம்போல் காலையில் எழுந்ததும் இறைவனைத் துதி செய்யவேண்டும். பின்னர், நீராடி புத்தாடைகள் உடுத்தி சந்தியா வந்தனம், பிராணயாமம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். காமோ கார்ஷீத் ஜபத்தை 108 முறை சொல்லவேண்டும்.

இதன் பிறகு எல்லா சேத்திரங்களில் உள்ள தெய்வங்கள் எல்லா நதிகளின் தேவியர்களையும் அழைத்து மகா சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும். மீண்டும் ஆற்றில், குளத்தில், வீட்டில் என அவரவர் வசதிக்கேற்ப நீராடி புது ஆடைகள் அணியவேண்டும். இரண்டு முறை நீராட வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

அதன் பிறகு, தந்தை, ஆச்சார்யர், குரு இவர்களில் யாரேனும் ஒருவரின் வாயிலாக பூணூலை அணிவிக்கவேண்டும். திருமணமாகாதவர்கள் ஒரு பூணூலையும் திருமணமானவர்கள் இரண்டு பூணூலையும் திருமணமான பின் தந்தையை இழந்தவர் மூன்று மூன்று பூணூலையும் அணியவேண்டும். அதன் பிறகு காயத்ரீ ஜபம் சொல்ல வேண்டும். உலகம் சிறக்கவும் நாடு சிறக்கவும் தன் நகரம் சிறக்கவும், தனது கிராமம் சிறக்கவும் தனது வீடு சிறக்கவும் காயத்ரீ ஜபத்தைச் சொல்ல வேண்டும். காயத்ரீ மந்திரத்தை தினம்தோறும் சொல்வது மிகவும் முக்கியம். சொல்லாலும் மனதாலும் செயலாலும் தீங்கிழைக்காத வைராக்கியத்தை மேற்கொள்ளவேண்டும். வைராக்கியம் இருந்தால் எல்லாம் சித்திக்கும். வைராக்கியம் போனால் சகலமும் போய்விடும் என்பதை மனதில் இருத்த வேண்டும் என்பதே ஆவணி ஆவிட்டத்தின் நோக்கம்.

ஆவணி அவிட்டத்தின் அர்த்தம் அறிந்து அதனை கொண்டாடுவோம். இறையருள் பெற்று இன்புறுவோம்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி