‘நாடு மாறுமா எனக்கேட்டார்கள் நான் மாற்றிக்காட்டினேன்’ : சுதந்திர தினவிழாவில் மோடி உரை!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை அரசு துடைக்கும். ஒருமணித்துளியைக் கூட வீணடிக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது
புதுடெல்லி: 370- ரத்து செய்யப்பட்டதன் மூலம் வல்லபாய் படேலின் கனவு நனவாகியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய நாடு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரம் பெற்றது. சுதந்திர காற்றை நம் மக்கள் சுவாசிக்கத் தொடங்கி 73 ஆண்டுகளாகும் நிலையில் இந்த பொன் நாளை நாட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.பிரதமராக நரேந்திர மோடி செங்கோட்டையில் 6வது முறையாக கொடியேற்றியுள்ளார்.
இந்நிலையில் மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ‘இந்தியாவில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள். இந்த நாம் தியாக திருநாளை கொண்டாடி வருகிறோம். சுதந்திரத்திற்காக உயிர்நீத்த அனைவரையும் வணங்குவோம். நாட்டின் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு வணக்கங்கள். மீண்டும் நான் மூவர்ண கொடியை ஏற்றியதில் மகிழ்ச்சி. காஷ்மீரில் சுமூக நிலையை கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை அரசு துடைக்கும். ஒருமணித்துளியைக் கூட வீணடிக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பதவியேற்ற 10 வாரத்திற்குள் பல முக்கிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது. முத்தலாக் தடை சட்டத்தை இஸ்லாமிய பெண்கள் கொண்டாடி வருகின்றனர். 370- ரத்து செய்யப்பட்டதை நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம், வல்லபாய் படேலின் கனவு நனவாகியுள்ளது என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் அடைய வேண்டிய வளர்ச்சியைத் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறோம். நாடு மாறுமா எனக்கேட்டார்கள் நான் மாற்றிக்காட்டினேன். அனைவரும் ஒற்றுமையாகச் செய்யப்பட்டு மாற்றத்தைக் கொண்டு வருவோம்’ என்றார்.