வறுமையில் இருந்த மாணவிகளுக்கு உதவிய கமல்: குவியும் பாராட்டு!
வறுமை காரணமாக மேற்படிப்பைத் தொடர முடியாத நிலையில் இருந்த இரு மாணவிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் நிதியுதவி அளித்துள்ளார்.
சென்னை: வறுமை காரணமாக மேற்படிப்பைத் தொடர முடியாத நிலையில் இருந்த இரு மாணவிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் நிதியுதவி அளித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஜவுளி முகவராக இருந்த தங்கராஜ் ஆந்திர மாநிலத்திலுள்ள நாராயணா இன்ஸ்டியூட்டில் தமிழரசி, வைஷ்ணவி என்ற தனது இரு மகள்களையும் படிக்க வைத்துள்ளார். ஓராண்டு நிறைவடைந்த நிலையில் கேரள வெள்ள பாதிப்பால் தங்கராஜ் தொழிலில் நட்டத்தைச் சந்தித்துள்ளார்.
இதனால் மேற்கொண்டு கட்டணம் செலுத்தமுடியாத நிலையில், நாராயணா இன்ஸ்டியூட் நிர்வாகம் மாணவிகளைப் பள்ளியை விட்டு நீக்கியுள்ளது. கல்வி, விளையாட்டு, யோகா உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கி மாவட்ட, மாநில, தேசிய அளவில் பல பரிசுகளை வென்ற சகோதரிகளின் கனவு இதனால் தகர்ந்துள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் , தமிழரசி, வைஷ்ணவி இருவரும் மேற்படிப்பைத் தொடர நிதியுதவி வழங்கியுள்ளார். இதனால் மாணவிகள் இருவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கமல் ஹாசனின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.