திருவள்ளுவர் சிலை மீது சாணம் பூசிய மர்மநபர்கள் : மு.க ஸ்டாலின் கண்டனம்..!
திருவள்ளுவர் சிலை மீது நேற்று இரவு மர்மநபர்கள் சாணத்தை அடித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
தஞ்சை, பிள்ளையார் பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது நேற்று இரவு மர்மநபர்கள் சாணத்தை அடித்துவிட்டுச் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, திருவள்ளுவரின் சிலையின் கண்களையும் கருப்பு காகிதத்தால் மூடியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். சிலை மீது சாணம் பூசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இன்று சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின், திருவள்ளுவர் காவி நிற உடை தான் அணிந்திருந்தார் என்று சமூக வலைத்தளங்களில், திருவள்ளுவர் காவி நிற உடை அணிந்திருப்பது போன்ற படத்தை வெளியிடுவதற்கும், சாணம் பூசிய இந்த அவமதிப்பிற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், திருவள்ளுவர் சிலையை அவமதித்து சாணம் பூசிய மர்ம நபர்களைக் கைது செய்து உரியத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.