×

ஒரு பொய் சொல்றோம்னா அதுல கொஞ்சம் உண்மையும் இருக்கணும்; மோடி அரசியலும்…வாக்குப்பதிவு இயந்திரமும்..!!!

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும், “ஒரு பொய் சொல்றோம்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும்” என்ற வசனத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் பெரும் நகரத்தில் மெத்த படித்த 50 வயதைத் தாண்டியவர்களிடம் ஒரு கணினியை இயக்கக் கூறினாலும், ஏன்? ஒரு சிறிய கையடக்க செல்போனைக் கொடுத்து அதில் உள்ள சில விஷயங்களைப் பார்க்க சொன்னாலோ ஒரு பதற்றம் இருக்கும். இதுவே கிராமப்புறத்தில் வாழும் நன்கு படித்த 50 வயதைத் தாண்டியவர்களிடம் இந்த பதற்றத்தின் அளவு
 

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும், “ஒரு பொய் சொல்றோம்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும்” என்ற வசனத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்

பெரும் நகரத்தில் மெத்த படித்த 50 வயதைத் தாண்டியவர்களிடம் ஒரு கணினியை இயக்கக் கூறினாலும், ஏன்? ஒரு சிறிய கையடக்க செல்போனைக் கொடுத்து அதில் உள்ள சில விஷயங்களைப் பார்க்க சொன்னாலோ ஒரு பதற்றம் இருக்கும். இதுவே கிராமப்புறத்தில் வாழும் நன்கு படித்த 50 வயதைத் தாண்டியவர்களிடம் இந்த பதற்றத்தின் அளவு கூடும்.

இப்படிப்பட்ட சூழலில் தான் டிஜிட்டல் இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. பல வளர்ந்த வெளிநாடுகளில் கூட இல்லாத வாக்குப்பதிவு இயந்திரம், மனித கழிவுகளை மனிதனே அள்ளும் முறைக்கு தீர்வு காணப்படாத நமது நாட்டில் அவசியமா என அது அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்ததே கேட்கப்பட்டு சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

இயந்திரங்கள் மனிதனை ஆட்சி செய்வது போன்று பல படங்களிலும், கதைகளிலும் பார்த்திருப்போம், படித்திருப்போம். அப்படி உண்மையிலேயே நம்மை ஆட்சி செய்யும் இயந்திரம் என்றால் அது வாக்குப்பதிவு இயந்திரம் தான். பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்று பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், பல அரசு துறைகள் அவருக்கு அடிமையாகிப் போனதற்கு சான்றாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊடகங்களை சந்தித்தது, சிபிஐ விவகாரம், ரிசர்வ் வங்கி விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் உள்ளன. அந்தவகையில், வாக்குப்பதிவு இயந்திரங்களும் அடிமையாகிக் கிடக்கின்றன.

தகவல் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி கண்டுள்ள இன்றைய காலகட்டத்தில், நாம் உபயோகிக்கும் செல்போன்களில் இருந்தும், சமூக வலைதளங்களில் இருந்தும் நம்மை பற்றிய விவரங்கள் அனைத்தையும் கண்காணிக்க முடியும். நம்முடைய தகவல்களை திருட முடியும். உதராணமாக, அண்மையில் நடைபெற்ற ஃபேஸ்புக் தகவல் திருட்டை கூறலாம்.

பாஜக-வை பொறுத்தவரை, சமூக வலைதளங்களையும், போட்டோஷாப்புகளை பயன்படுத்தியும், சில ஆண்டுகள் திட்டமிடலுடன், மோடி என்ற பிம்பத்தை கட்டி, அவரை குஜராத் மாடலாக சித்தரித்து கடந்த 2014-ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சி அரியணையை கைப்பற்றியது. அதன்பின்னர், குஜராத் சென்றவர்கள் அனைவரும் பாஜக கூறிய அளவிற்கு அங்கு வளர்ச்சி இல்லை என கூறியது வேறு கதை.

அந்த அளவிற்கு பிரதமர் மோடிக்காக வேலை பார்க்கும் தகவல் தொழிநுட்ப பிரிவு பலமாக இருக்கிறது. அந்த பிரிவினர், எந்த வேலையையும் செய்யக் கூடியவர்கள் என்பதை அங்கிருந்து வந்தவர்கள் சொல்ல கேள்விப் பட்டிருப்போம். அதுகுறித்த தகவல்களை அளிக்கும் அவர்கள், பின்நாட்களில் எந்த அளவிற்கு ட்ரோல் செய்யப்பட்டனர் என்பதையும் அறிவோம். பாஜக-வின் அந்த டிஜிட்டல் ஆர்மி எந்த அளவிற்கு அரசு அதிகாரத்திற்குள் நுழையக் கூடியவர்கள் என்பதற்கு கர்நாடக தேர்தல் தேதியை பாஜக முன்கூட்டியே அறிவித்ததே சான்று.

இப்படி ஒரு சூழலில், அதிகாரத்தை தங்கள் வசமே வைத்துக் கொள்ள உதவும் ஒரு இயந்திரத்தை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வலுவாக இருக்கும் ஒரு கட்சியால் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியாது என்று கூற இயலாது.

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெற்ற மாநில தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை பார்த்தால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் தேர்தல்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று இருக்கும். அதே, இடைத்தேர்தல்களில் தோல்வியை சந்தித்திருக்கும். உள்ளே நுழைய முடியாத மாநிலங்களில், தமிழகத்தை போன்றோ, கோவா போன்றோ நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

வாக்குப்பதிவு இயந்திரம் அக்கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தால், அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று விடலாமே என்ற கேள்வி நமக்கு இயல்பாகவே எழும். இங்கு தான் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும், “ஒரு பொய் சொல்றோம்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும்” என்ற வசனத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று விட்டால், இந்த தந்திர அரசியல் வெளிப்பட்டு விடும். எனவே, விட்டு பிடிக்கும் இந்த போக்கை தான் அக்கட்சி கையாள்வதாக தெரிகிறது.

அதற்கு ஏற்றாற்போல், நேற்றைய தேர்தல் முடிவுகள் வெளியான போது, வாக்கு இயந்திரம் இப்போது சரியாக செயல்படுகிறதா? என்று காங்கிரஸ் கட்சிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியது நினைவிருக்கலாம். இதன் மூலம் வாக்கு இயந்திரங்கள் சரியாகவே இருக்கின்றன. அவை பாஜக-வுக்கு ஆதரவாக இல்லை என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.

எனவே, நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் இருந்து, அது பாஜக-வுக்கு பின்னடைவு, ஜனநாயகம் மலருகிறது என்று தப்புக் கணக்கு போட்டால், அடுத்து வரவுள்ள மக்களவை தேர்தலில் தாமரை மலர்ந்தே தீரும்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு  உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கடுப்பில் இருக்கும் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்களா என்பது அக்கட்சிக்கு சந்தேகமே, ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்தில்அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளது அக்கட்சி. 

முதலில் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் முறைக்கு தீர்வு காண்போம்…பின்னர், டிஜிட்டல் இந்தியா, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு செல்லலாம்.