எடப்பாடிக்கு ஷாக் கொடுக்கும் விஜயகாந்த்… ஸ்டாலினுடன் நெருங்க பிரேமலதா போடும் பகீர் கணக்கு..!
தே.மு.தி.க.வின் இந்த திடீர் மாற்றத்தை கவனிக்கும் அரசியல் விமர்சகர்கள் “ அடுத்த தேர்தல்ல தி.மு.க. கூட கூட்டணி வைப்பதற்காக இப்பவே துண்டு போட துடங்கிடுச்சு தே.மு.தி.க. அதனாலதான் அரசாங்கத்தை இடிச்சு அறிக்கை விட ஆரம்பிச்சிருக்காங்க.
கடந்த சட்டமன்ற தேர்தலிலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க. நடத்திய பகீரதப்பிரயத்னங்களும், அதற்கு தே.மு.தி.க. காட்டிய பெப்பேக்களும் அகில இந்திய அரசியலரங்கம் அறியும்.
தி.மு.க.வின் கூட்டணிக்குள் வராதது மட்டுமில்லை, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை வளைத்து வளைத்து வசவு பாடியது அக்கட்சி. இரண்டு தேர்தல்களிலும் விஜயகாந்தின் உடல்நலம் மிகவும் சரிவை சந்தித்து அவரால் பேசக்கூட இயலாத நிலையில் இருக்கிறார். இந்த சூழலில் அவரது மனைவியும், கழக பொருளாளருமான பிரேமலதாவும், அவரது தம்பி சுதீஷும்தான் கூட்டணி, வேட்பாளர்கள் என முடிவு செய்கின்றனர். ஆனால் அவர்களின் முடிவு படுபாதக தோல்வியை சந்தித்துக் கொண்டே இருக்கிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணிக்குள் நுழைவது போல் ஸீன் காட்டிவிட்டு, அ.தி.மு.க. கூட்டணிக்குள் நுழைந்தது தே.மு.தி.க. இதன் பின் கூட்டணியின் பிரசார மேடைகளில் ஸ்டாலினை வறுவறுவென வறுத்துக் கொட்டினார் பிரேமலதா. தேர்தல் முடிவில் ஆனானப்பட்ட அ.தி.மு.க.வே மரண அடி வாங்கி நிற்க, தே.மு.தி.க.வெல்லாம் எந்த மூலையில் போய் விழுந்து கிடந்தது என்பதை யாரும் விளக்கிட வேண்டிய அவசியமில்லை.
இப்படியொரு ரிசல்டை சந்தித்த பின் சுத்தமாக பேச்சு மூச்சின்றி கிடந்தது தே.மு.தி.க. ஆனாலும் இதே கூட்டணியில் இருக்கும் பா.ம.க. மிக தெளிவாக ஒரு ராஜ்யசபா சீட்டை வாங்கிக் கொண்டு அன்புமணியை செட்டிலாக வைத்துவிட்டது. ஆனால் தே.மு.தி.க.வோ முதலிலேயே சூதானமாக இல்லாமலும், தேர்தலில் அடியோடு தோற்றும் போனதால் ஏகத்துக்கும் டென்ஷனாகிவிட்டது . எனவே அன்புமணி பதவியேற்புக்குப் பின் தங்களுக்கும் சில ஆதாயங்களை செய்து தரவும், அரசியல் ரீதியில் சில அதிகார அங்கீகாரங்களை செய்து தரவும் தே.மு.தி.க. தரப்பு கேட்டிருக்கிறது. அதற்கு ‘வாய்ப்பே இல்லை’ என மறுத்துவிட்டாராம் இ.பி.எஸ்.
விளைவு, கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ந்து விஜயகாந்தின் பெயரில் அறிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது தே.மு.தி.க. அதில் ஆளும் அ.தி.மு.க. அரசை இடித்தும், அட்வைஸ் செய்து கொண்டுமாக உள்ளனர். தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ள இப்பவே ஏரி, குளங்களை தயார் செய்யவும்! என்று முதலில் ஒரு குட்டு குட்டியவர்கள், அடுத்து “தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளது. குப்பையோடு மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உருவாகி, தொற்று நோய் பரவி, சுகாதார சீர்கேடு பரவும் நிலை உள்ளது. குறிப்பாக சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலை இருப்பதை காண முடிகிறது. எனவே அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும்.” என்று நீட்டி முழக்கி ஒரு அறிக்கையை சூடாகவே தட்டிவிட்டுள்ளனர்.
தே.மு.தி.க.வின் இந்த திடீர் மாற்றத்தை கவனிக்கும் அரசியல் விமர்சகர்கள் “ அடுத்த தேர்தல்ல தி.மு.க. கூட கூட்டணி வைப்பதற்காக இப்பவே துண்டு போட துடங்கிடுச்சு தே.மு.தி.க. அதனாலதான் அரசாங்கத்தை இடிச்சு அறிக்கை விட ஆரம்பிச்சிருக்காங்க. ஆக எடப்பாடியாருக்கு அல்வாவும், ஸ்டாலினோடு அண்ட்கோவும் போட தயாராகிடுச்சு அக்கட்சி.” என்கிறார்கள்.