×

"லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் அடிபணிந்து..." - அரசு மீது பாய்ந்த விஜயகாந்த்!

 

திருவொற்றியூரில் அரிவாக்குளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக் கட்டடம் நேற்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 24 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. கட்டடத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதைப் பார்த்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற தொடங்கினர். இதனால் உயிர் சேதங்களும் காயங்களும் தவிர்க்கப்பட்டன. இதையடுத்து வேதனை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்பிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணமும், மாற்று இடமும் வழங்க உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள், மேம்பாலங்கள், அணைகள், இன்றளவும் உறுதியாக நிலைத்து நிற்கும் நிலையில், தற்போது உள்ள கட்டடங்கள் சில ஆண்டுகளில் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகின்றன. லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அரசு அடிபணிந்து தரமற்ற கட்டிடங்களைக் கட்டுவதாலேயே, சொற்ப காலத்தில் கட்டடங்கள் இடிந்து விழும் அவலம் ஏற்படுகிறது. 

இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள பழைய கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின் முடிவில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களைக் கண்டறிந்து அதனை முன்கூட்டியே அகற்ற நடவடிக்கை வேண்டும். இதன் மூலம் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும். இனிமேல் கட்டப்படுபவை தரமானதாகக் கட்டி முடித்து, அதனை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.