×

“விவேக் மரணம் பல கேள்விகளுக்கு இடமளித்துள்ளது…” திருமாவளவன் பரபரப்பு ட்வீட்!

நடிகர் விவேக் மறைவுக்கு திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடிகர்_விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது. தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில
 

நடிகர் விவேக் மறைவுக்கு திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடிகர்_விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது. தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், “வெள்ளித் திரையுலகில் சின்னக் கலைவாணர் என்ற அழைக்கப்பட்ட நடிகர் திரு.விவேக் என்கிற விவேகானந்தன் (59) இன்று 17.04.2021 அதிகாலை மாரடைப்பால் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநர் கே.பாலச்சந்தரால் வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அற்புத நகைச்சுவைக் கலைஞர்.

கலைவாணர்என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பின்னர் மூட நம்பிக்கை எதிர்ப்புக்கும், அறிவியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனைக்கு வெள்ளித்திரையை ‘லாவகமாக’ பயன்படுத்திய முன்னுதாரணக் கலைஞர். தலைமைச் செயலகப் பணியில் இருந்த காலத்தில் ஓய்வு நேரத்தில் நகைச்சுவை கலையின் மூலம் சமுக சீர்திருத்தக் கருத்துகளை மேடைகளில் நகைச்சுவை கலந்து பரப்புரை செய்யத் தொடங்கிய மேடைக்கலைஞர், திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்த விவேக் , மத்திய, மாநில அரசுகள், கலை இலக்கிய அமைப்புகளின் விருதுகளை பெற்றவர். நாட்டின் மதிப்பு மிக்க பத்மஸ்ரீ விருதும், சத்தியபாமா பல்கலைக் கழகம் வழங்கிய கௌரவ முனைவர் பட்டமும் குறிப்பிடத்தக்கது.

மேடைக்கலைஞர், நகைச்சுவை நடிகர், பின்னணி பாடகர், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரக் கலைஞர், சமூக செயல்பாட்டாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட விவேக், காலம் சென்ற குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாமின் கருத்துக்களை குழந்தைகளிடம் தொடர்ந்து எடுத்துச் சென்றவர். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரழிப்பாகும். கலைஞர் விவேக்கின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது வாழ்விணையர் திருமதி.அருள்செல்வி உள்ளிட்ட குடும்பத்தாருக்கும், திரையுலகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.