×

காயத்ரி ரகுராம் இதை செய்திருக்கலாம்- வானதி சீனிவாசன்

 

தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

கோவையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிலையில் இருந்து இரண்டு விலையில்லா சுத்திகரிக்கப்பட்ட ஏ.டி.எம்  குடிநீர் இயந்திரத்தை சட்டமன்ற உறுப்பினர் வனதி சீனிவாசன் துவக்கி வைத்தார். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் மற்றும் உக்கடம் பகுதியில் தலா ரூ.17.17 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா ஏ.டி.எம் குடிநீர் இயந்திரத்தை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவங்கி வைத்தார். 

கோவை மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிலையில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஏ.டி.எம். போன்ற எலட்ரானிக் அட்டையை கொண்டு ஒரு நாளைக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும், அப்பகுதியில் உள்ள ஆயிரம் குடும்பத்தினருக்கு இந்த எலட்ரானிக் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் பகுயில் உள்ள குடிநீர் மையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "பெண்கள் சிரமத்தை போக்கும் வகையில் ஒரு நாளுக்கு 20 லிட்டர் குடிநீர் எந்த நேரத்திலும் பிடித்து கொள்ளும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தொகுதி முழுவதும் 5 இடங்களில் இந்த இயந்திரம் அமைக்க திட்டமிட்டுள்ளோம், இரண்டாவதாக  உக்கடம் பகுதியில் இன்று குடிநீர் இயந்திரம் துவக்கி வைக்கிறோம். சூயஸ் திட்டத்திற்காக பொது குழாய்கள் அகற்றப்பட்டால், சூயஸிடம் மாநகராட்சி மூலமாக பேசுவோம், பொதுக்குழாய் எடுப்பதாக இருந்தால் அரசிடம் கண்டிப்பாக பேசுவோம்.

காயத்ரி ரகுராம் தனக்கு பிரச்சனை ஏற்படும் போது  கட்சியில் உள்ள நபர்களிடம் பேசலாம். பெண்களுக்கு எதிரான செயல்களுக்கு கட்சி கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுவெளியில் பேசுவதை விட, யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேச முயற்சி செய்ய வேண்டும். தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது, கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை" என தெரிவித்தார்.