குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் ராஜினாமா… எங்க எம்.எல்.ஏ.க்கள பா.ஜ.க. விலைக்கு வாங்குகிறது- காங்கிரஸ் குற்றச்சாட்டு
குஜராத்தில் பா.ஜ.க. தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. மொத்தம் 182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் பா.ஜ.க.வுக்கு மொத்தம் 103 எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு தற்போது 66 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இம்மாதம் 19ம் தேதியன்று குஜராத்தில் காலியாக உள்ள 4 ராஜ்யசபா உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆக்சே படேல் மற்றும் ஜிது சவுத்ரி ஆகியோர் நேற்று தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை செய்வதாக ராஜினாமா கடிதத்தை குஜராத் சட்டப்பேரவை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியிடம் வழங்கினர். அவரும் அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக தெரிவித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தா கூறுகையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. விலைக்கு வாங்குகிறது என குற்றச்சாட்டினார்.
குஜராத் பா.ஜ.க. தலைவர் ஜிது வாகனி இது குறித்து கூறுகையில், காங்கிரஸ் தனது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மரியாதை அல்லது குறைகளை கூட தீர்க்கவில்லை. அந்த கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்தது மட்டுமல்ல அவர்களது சட்டமன்ற உறு்பபினர்களின் நம்பிக்கையையும் இழந்து விட்டது என தெரிவித்தார். குஜராத்தில் ஒவ்வொரு ராஜ்யசபா இடத்துக்கும் குறைந்தபட்சம் 35 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 2 ராஜ்யசபா இடங்களில் எளிதாக பெற்று விடும். 3வது இடத்துக்கு 2 உறுப்பினர்கள் ஆதரவு பற்றாக்குறையாக உள்ளது. அதேசமயம் தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியால் ஒரு ராஜ்யசபா இடத்தை மட்டுமே கைப்பற்ற முடியும். இரண்டாவது சீட்டுக்கு இன்னும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.