×

பதவி கொடுத்த பிறகு தான் எடப்பாடி பழனிச்சாமியின் குணம் தெரியும்- டிடிவி தினகரன்

 

பதவி கொடுத்த பிறகு தான் எடப்பாடி பழனிச்சாமியின் குணம் தெரிந்ததாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த குழப்பம் நீடித்து வரும் நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைக் கழக செயலாளர், கழக அமைப்புச் செயலாளர்கள், அணிச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என 138 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மாநிலம் முழுவதும் இருந்து 320 கழக நிர்வாகிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்," வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது தற்போது அதிமுகவில் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சி, அதிகாரம், வசதி, வாய்ப்பு இவற்றை தாண்டி, தொண்டர்கள் ஆதரவு அவசியம். அதிமுகவில் பொதுக்குழு என்கிற பெயரில் கூத்து நடந்தது. அதிமுகவில் இருப்பது அசிங்கங்கள், அதிலிருந்த சிங்கங்கள் எல்லாம் எங்கள் பக்கம் உள்ளனர். நாங்கள் நரி கூட்டத்தில் சேர விரும்ப மாட்டோம். ஓபிஎஸ் தொடங்கிய போது சந்தித்தித்தேன். அதன் பிறகு சந்திக்கவில்லை. ஓ.பி.எஸ் தனது நண்பர். எம்.ஜி.ஆர் கட்சி நயவஞ்சகர்கள் கையில் உள்ளது. 

உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரை முறையீடு செய்ததற்கு பின், அதிமுக கட்சிக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை. அதிமுகவின் தற்போதைய நிலையை பார்த்தால் வருத்தமாக உள்ளது. நிர்வாகிகளின் பெரும்பான்மையை வைத்து முடிவு எடுக்க முடியாது. தலைமை பதவியை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசியல் பதவிக்கு நீட் தேர்வு-லாம் வைக்க முடியாது, பதவி கொடுத்த பிறகு தான் எடப்பாடியின் குணம் தெரியும். 

அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு பாஜக காரணமாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இன்னும் அதிமுகவில் தனது ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கிறார்கள். நரிக் கூட்டத்துடன் மோதிக் கொள்ள விருப்பமில்லை. நாங்கள் எங்கள் சின்னத்திலும் அதிமுக வேட்பாளர்கள் சுயேச்சையாகவும் போட்டியிடுவார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எந்த தேசிய கட்சியுடன் இணைந்து செயல்படப் போகிறது பாஜக, திமுக ஆகிய கட்சிகளை தேவையின்றி விமர்சிக்க மாட்டேன்” எனக் கூறினார்.