இந்த தொகுதிகளில் எடப்பாடி – தினகரன் இடையே கடும் போட்டி! வெற்றி யார் பக்கம்?
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் நேரடியாக போட்டிக்கு தயாராகியுள்ளன. பல இடங்களில் திமுக vs அதிமுக நேரடியான போட்டிக்கு தயாராகியுள்ள நிலையில் அரசியல் களம் அனல்பறக்கிறது. இத்தகைய சூழலில் கோவில்பட்டி தொகுதி அதிக கவனம் பெற்ற தொகுதியாக மாறியுள்ளது. அதாவது தற்போதுள்ள அதிமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் தினகரனின் அமமுக கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனே அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து போட்டியிடுகிறார்.
தினகரனின் அமமுக சார்பில் போட்டியிடவுள்ள 50 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து, அமமுகவின் பூக்கடை என்.சேகர் போட்டியிடுகிறார். அதேபோல் துணை முதல்வர் ஓபிஎஸ்-ஸை எதிர்த்து போடி தொகுதியில் அமமுகவின் எம்.முத்துசாமி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்த எம்எல்ஏ ராஜவர்மனுக்கு சாத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு போட்டியாக அமமுகவின் ராமுத்தேவரும், விழுப்புரத்தில் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு போட்டியாக ஆர்.பாலசுந்தரமும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்திற்கு எதிராக ஒரத்தநாட்டில் சேகர் ஆகியோர் களம் காணவுள்ளனர்.
அதிமுக ராஜன் செல்லப்பாவை எதிர்த்து திருப்பரங்குன்றத்தில் அமமுகவின் டேவிட் அண்ணாதுரை, கன்னியாகுமரியில் தளவாய்சுந்தரத்திற்கு எதிராக அமமுகவின் செந்தில்முருகன் என களமிறக்கப்படவுள்ளனர். இதுவரை தினகரன் 65 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதிமுக – அமமுக இடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் என தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கூறிய சட்டசபை தொகுதிகள் அதிக கவனம் பெற்றுள்ளன. முன்னதாக கோவில்பட்டியில் பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்றியுள்ளது. இதனால் யார் வேண்டுமானாலும் கோவில்பட்டியில் போட்டியிட்டாலும் அதை பற்றி கவலையில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இந்த சூழலில் வெற்றி யார் பக்கம் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.