×

பாஜகவினர் ராகுல் காந்தி உடை குறித்து தரம் தாழ்ந்து விமர்சிப்பது அரசியல் அல்ல, அசிங்கம்- திருநாவுக்கரசர்

 

பாஜகவினர் ராகுல் காந்தி உடை குறித்து தரம் தாழ்ந்து விமர்சிப்பது அரசியல் அல்ல, இது அசிங்கம் என காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தின் முன்னாள் தலைவரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காவேரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் மறுவாழ்வு மற்றும் மறு குடிஅமர்வு குழு கூட்டம் இன்று நடைபெற்றது.‌ இந்த கூட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்ட கால்வாய் அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குதல் தொடர்பாகவும் நிலம் கையகப்படுத்துதலில் ஏற்படும் விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. 

இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு முன்செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர், “ராகுல் காந்தியின் நடைபயணம் தமிழகத்தில் வெற்றிகரமாக அமைந்தது, அதே வெற்றி பயணம் கேரளாவிலும் தொடர்ந்து வருகிறது, 160 நாட்கள் 3500 கிலோமீட்டர் தேசம் முழுவதும் 14 மாநிலங்களில் ராகுல் காந்தி செல்கிறார், அவர் செல்லக்கூடிய வழிகளில் ஏற்படும் தாக்கம் மற்ற மாநிலங்களிலும் அது பிரதிபலிக்கிறது, காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சியையும், எழுச்சியையும் அவரது பயணம் ஏற்படுத்தி உள்ளது. மகாத்மா காந்தியின் பயணம் இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தது. 

வினோபாவின் பயணம் பூமிதான இயக்கத்தை வெற்றியடைய வைத்தது. தற்போது ராகுல் காந்தியின் பயணம் வரக்கூடிய 2024 நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்து ராகுல்காந்தி பிரதமராக கூடிய வாய்ப்பை பிரகாசம் ஆக்கியிருக்கிறது.  இந்த பயணம் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது மட்டுமல்ல மோடி அரசால் பாஜக அரசால் இந்திய நாடு பிரிந்து உள்ளது ஜாதியால் மதத்தால் மொழியால் பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தி மக்களை பிரித்தாளுகின்ற அந்த நிலையில் இருந்து மக்களை ஒன்றுபடுத்துவதற்காகவும் தேசத்தை ஒன்று படுத்துவதற்காகவும் இந்த பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு இருக்கிறார், இந்த பயணத்தில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் வலிய வந்து வரவேற்பை தருகின்றனர். கின்னஸில் இடம் பெறக்கூடிய வகையில் இந்த பயணம் வெற்றிகரமாக அமையும். 

பாஜக செய்யக்கூடிய விமர்சனங்கள் அசிங்கமான விமர்சனம் தரக்குறைவான விமர்சனம். ராகுல் காந்தியின் பயணத்தில் ஏதேனும் பிழையோ அல்லது அவரது உரைகளில் பிழையோ இருந்தால் சுட்டிக்காட்டலாம் ராகுல் காந்தி என்ன காலனி அணிகிறார் என்ன பனியன் ஜட்டி போடுகிறார் என்ன சட்டை போடுகிறார் என்பதா பாஜகவுக்கு முக்கியம் இதுபோன்று தரம் தாழ்ந்து விமர்சிப்பது அரசியல் அல்ல, இது அசிங்கம், ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக இது போன்ற விமர்சனம் செய்வதற்கு வெட்கப்பட வேண்டும். இதை காங்கிரஸ் பொருட்படுத்தவில்லை, ராகுல் காந்தி பயணத்தால் எதுவும் நிகழ்ந்து விடாது என்று சொல்வதற்கு காரணம் அவர்களால் இந்த பயணத்தை கூட நடத்த முடியாது 3500 கிலோமீட்டர் 160 நாடுகள் மோடியால் நடக்க முடியுமா அமித்சா நட்டாவால் நடக்க முடியுமா, வேறு யாரேனும் நடப்பதற்கு அனுமதிப்பார்களா மாட்டார்கள். 

தங்களால் முடியாததை தங்கள் கட்சியால் முடியாததை ஒரு கட்சித் தலைவர் செய்கிறார் என்ற ஆத்திரத்தின் நிலைப்பாடு தான் இவர்கள் செய்கிற இந்த விமர்சனம். ராகுல் காந்தி பயணம் எந்தவித தாக்கத்தையுமே ஏற்படுத்தாது என்றால் ஏன் அதைப் பற்றி கவலை அடைந்து விமர்சனம் செய்ய வேண்டும் பாஜக அவர்களது வேலையை மட்டுமே பார்க்கலாமே, தினம் ராகுலை நோக்கி தாக்குதல் நடத்துகிறார்கள் என்றாலே அதன் நோக்கம் ராகுல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்று தான் அர்த்தம். அதனால் தான் திரும்பத் திரும்ப விமர்சனத்தை செய்து வருகின்றனர். 

பாஜக தமிழகதலைவர் அண்ணாமலை நாடு  தழுவிய தலைவராக அறியப்பட்டவர் அல்ல, அவர் தலைவராக திணிக்கப்பட்டவர், மற்ற தலைவர்களை பார்க்கும் பொழுது வயது மூப்பின் காரணமாக இயற்கையாக சிலர் மரியாதை கொடுப்பதற்காக காலில் விழலாம் ஆசிர்வாதம் வாங்கலாம், ஆனால் அண்ணாமலைக்கு வயது மூப்பும் கிடையாது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இருக்கக்கூடிய தலைவரும் அல்ல, தமிழ்நாட்டின் மூத்த தலைவரும் அல்ல, அதனால் இவ்வாறு கழுத்தைப் பிடித்து கீழே அமுக்கி தான் இவர் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்வது தமிழ்நாடு முதலமைச்சரோ தமிழக அரசு தனித்து முடிவெடுத்து ரத்து செய்ய முடியாது. இது இந்திய அளவில் எடுக்க வேண்டிய முடிவு. விதிவிலக்கு கொடுக்க வேண்டும் என்றாலும் மத்திய அரசுதான் அதை கொடுக்க வேண்டும். ஆனால் மோடி அரசு இதில் பிடிவாதமாக நீட் தேர்வை அகில இந்திய அளவில் நடைமுறைப்படுத்த நினைக்கின்றனர். ஆனா தமிழக அரசு நீட் தேர்வில் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் நீட் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது உண்மை அதனால் இதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறது, ஆனால் தமிழக அரசால் மட்டுமே அதை செய்து விட முடியாது இதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பும் இல்லை, தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருந்தாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள மற்ற மாணவர்களோடு போட்டியிடும் அளவிற்கு நமது மாணவர்களை தயார்படுத்த தமிழக அரசே உரிய முறையில் பயிற்சியை அளித்து தயார்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளிலுமே நல்ல பயிற்றுநர்களை கொண்டு ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக தரமான நீட் பயிற்சியை தமிழக அரசு அளிக்க வேண்டும். ஒருபுறம் நீட் ரத்து செய்ய தமிழக அரசு முயற்சி செய்தாலும் மறுபுறம் இந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும், நீட் ரத்து செய்தால் மகிழ்ச்சி தான் ஆனால் அது முடியாத பட்சத்தில் மற்றநீட் ரத்து செய்தால் மகிழ்ச்சி தான் ஆனால் அது முடியாத பட்சத்தில் மற்ற மாநிலத்தில் உள்ள மாணவர்களோடு போட்டி போடும் அளவிற்கு நமது மாணவர்களை தயார் படுத்தி தேர்ச்சி சதவீதத்தை குறையாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் வாக்குறுதி என்பது ஐந்தாண்டுகளுக்கு கொடுக்கப்பட்டது தான் தற்பொழுது ஒன்றரை ஆண்டு காலம் தான் திமுக ஆட்சி அமைத்து ஆகிறது ஏற்கனவே கொரோனா அதன் பிறகு வந்த வெள்ளம் இதையெல்லாம் சமாளித்து வந்துள்ளனர் இன்னும் இருக்கக்கூடிய ஆண்டுகளில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றுவார்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது நிறைவேற்றவும் வேண்டும். ஜாக்டோ ஜியோ மாநாட்டில் தமிழக முதலமைச்சர் அவர்கள் எதிர்பார்த்த வற்றை அறிவிக்கவில்லை என்றாலும் அவர்கள் வைத்த கோரிக்கையை முதலமைச்சர் பரிசளித்து பின்னே அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.