×

திருமாவளவன் திமுக கூட்டணியைவிட்டுப் பிரிந்து செல்ல மாட்டார்- திருநாவுக்கரசர்

 

தமிழ்நாடு ஆளுநர் எங்கு சென்றாலும் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்றே பேசி வருகிறார், அவர் விவரம் தெரியாமல் பேசவில்லை, விளம்பர வெளிச்சத்திற்காக சர்ச்சையாக வேண்டுமென்று பேசி வருகிறார் என திருச்சி எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நாங்கள் ராகுல் காந்தியை தான் முன் நிறுத்துகிறோம், ராகுல் காந்தி மக்கள் மனதை கவர்ந்த ஒட்டுமொத்த தலைவராக திகழ்கிறார். இதனை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையோடு ஏற்கும் என நம்புகிறோம். தமிழ்நாடு ஆளுநர் எங்கு சென்றாலும் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றே பேசி வருகிறார். அவர் விவரம் தெரியாமல் பேசவில்லை,விளம்பர வெளிச்சத்திற்காக சர்ச்சையாக வேண்டுமென்று பேசி வருகிறார். ஒன்று அவர் தன்னிச்சையாக பேச வேண்டும் அல்லது ஒன்றிய அரசு சொல்லி பேச வேண்டும்.

ஜனநாயக நாட்டில் அந்தந்த கட்சிகளின் கருத்துக்களை சொல்வது அவர்களின் உரிமை, அதன் அடிப்படையில் தான் திருமாவளவன் தனது கருத்துக்களை சொல்லி வருகிறார், கருத்துக்களை சொல்வதால் கூட்டணி கட்சியை விட்டு வெளியே செல்வார்கள் என்பதும், வேறு கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதும் தவறான யூகங்கள், அதனை ஆராய்ச்சி செய்ய வேண்டாம். திருமாவளவன் திமுக கூட்டணியைவிட்டுப் பிரிந்து செல்ல மாட்டார். திமுக கூட்டணியில் உள்ள யாரும் அதிமுகவுக்கு செல்ல வாய்ப்பில்லை. ஜெயக்குமார் வேண்டுமென்றே அவதூறு பரப்பிவருகிறார். தமிழ் மொழி குறித்து உலக நாடுகளுக்கு செல்லும் தலைவர்கள் பேசுவது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான் ஏனென்றால் தமிழ் மொழியை புறக்கணிக்க முடியாது. முதன்மையான பிரதான மொழி தமிழ் மொழி. மோடி இதுபோன்று ஆதரவாக பேசுவதால் மட்டுமே அவர் தமிழர்களின் வாக்குகளை வாங்க முடியாது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை யாருக்கு கொடுத்தாலும், அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் அல்லது இப்போது இருப்பவரை தொடர சொன்னாலும் தொடர்வார். இது ஒரு நியமன பதவி தான். இது குறித்து காங்கிரஸ் டெல்லி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். எனக்கு அந்த பதவியை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன். நடிகர் விஜய் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்ததும் ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று கூறியதும் வரவேற்கத்தக்கது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், விஜய் அரசியலுக்கு வருவதும் வராமல் இருப்பதும் அவரது முடிவு” என்றார்.